நாட்டுப்புற நிகழ்த்துகலைகள், நாட்டுப்புற
மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. அவை பல்வேறு சமூக, வெளிப்பாட்டினால்
உருவாகின்றன. அவ்வுணவர்வு வெளிப்பாடுகளுக்கு ஏற்ப மொழிவழி இசையும் பாடலும்
உருவாகி அதற்கேற்ப பலவகையான உடல் இயக்க அசைவுகளை உருவாக்குகின்றன.
இவ்வுடல் இயக்க அசைவுகள் பாடல் இசைக்கேற்ப முறைப்படுத்தப்படும்பொழுது,
ஆட்டங்கள் உருவாகின்றன. ஆட்டத்தின் இயக்கச் செயற்பாட்டு நிகழ்வுகள் பல்வேறு
சடங்கு, கலை, பொருளாதாரம் மற்றும் செயற்கை சூழல்களுக்கு ஏற்ப சமூக மதிப்பு
அடிப்படையில் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்படுவதால், அவற்றின் ஒட்டு
மொத்தமான கலை நிகழ்வு அமைப்பை நாட்டுப்புற ஆட்டங்கள் அல்லது நாட்டுப்புற
நிகழ்த்துகலைகள் என்பது பொருத்தமாகும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை
இசையாகிறது. கற்கள் முறையாக அடுக்கப்படும் பொது கட்டிடக்கலை உருவாகிறது.
வடிவங்கள் வகுத்துச் சீர்படுத்தப்படும்போது சிற்பக்கலை ஆகிறது. கோடுகள்
ஒன்றிணைக்கப்படும்போது ஓவியக்கலை உருவாகிறது. கற்பணை
முறைப்படுத்தப்படும்பொழுது கவிதைக் கலையாகிறது. அவ்வாறே
ஒழுங்குபடுத்தப்பட்ட அசைவுகள் நடனக்கலை ஆகிறது. இக்கருத்தின்
அடிப்படையிலேயே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளும் உருவாகின்றன. எனவே அவை
தனித்தன்மை கொண்டவை.
நாட்டுப்புற ஆட்டங்களின் அமைப்பும்
பொருளும் வேறுபட்டவை. அவை மக்கள் வாழும் சமூகத்தின் ஒரு கூறாக அமைந்தாலும்
அவற்றை ஆய்வு செய்யும்போது, எங்கோதொலை தூரத்திலுள்ள ஒரு சமூகத்தை ஆய்வு
செய்ய பயன்படுத்தும் உற்று நோக்கல் உத்திகளையும், ஆய்வு நெறிமுறைகளையும்
பயன்படுத்தவேண்டியுள்ளது என்பது லெவிஸ்ட்ராஸ் கருத்து. இந்நிலை,
நாட்டுப்புற நிகழ்த்துகலைகள், பிற கலைகளிலிருந்து விலகி வேறுபட்டு
நிற்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார் சுதானந்தா. (ஆட்டமும்
அமைப்பும்: 1991:9) இந்நிலைக்கு இருவகை காரணங்கள் கூறப்படுகின்றன ஒரு
சிலர், கிராமியக் கலைகள் மிகப்பழமையானவை என்கின்றனர். அதாவது, அக்கலைகள்
இடத்தால் நமக்கு அண்மையிலிருந்தாலும், காலத்தால் மிகவும் தொலைவிலுள்ளவை
என்பதாகும். ஒரு சிலர், எந்த ஒரு சமூகத்தில் நடைபெறும் சமூக,
மனச்செயல்களின் வடிவங்களும் உணர்நிலைக்கு அப்பாலுள்ள கூட்டுப்பண்பை
அடிப்படையாகக் கொண்டவை என்பர். (Levistreuss: Structural Anthropology:
1979:360) ) நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், உணர்தற்கு அப்பாற்பட்ட
நிலையிலுள்ள குழுப்பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இக்கருத்தின்
வாயிலாக அறியலாம். மேற்குறிப்பிட்ட இருவகை காரணங்களுள் எது உண்மையானதாக
இருந்தாலும் நாட்டுப்புறக் கலைகள் தனித்தன்மை கொண்டவை என்பதிலும் அவை
அரிதாக உணரத்தக்க நிலையிலுள்ளன என்பதிலும் கருத்து வேறுபாடிருக்க முடியாது.
இவ்வாறு தனித்தன்மை கொண்ட நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் கதை, பாட்டு,
பேச்சு, நடிப்பு, தாளம், ஒப்பனை முதலிய பல்ஈறு கூறுகளைத் தன்னுள் கொண்டு
விளங்குகின்றன. இவை இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம்
வேறுபட்டு விளங்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றன. அவற்றோடு தொடர்புடைய
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு நிலைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக
அமைகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்
பல்வேறு வகையான நிகழ்த்துகலை வடிவங்கள்
காணக்கிடைக்கின்றன. அக்கலை வடிவங்களை இனம் காண்பதன்மூலம் அப்பகுதி மக்களின்
வாழ்க்கை பண்பாட்டு முறைமைகளை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில்,
தென்மாவட்ட நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் வரிசையில் சிறப்பாக
நிகழ்த்தப்பட்டுவரும் கோலாட்டக் கலைவடிவங்களை ஆய்வுப் பொருளாகக் கொண்டு
நிகழ்த்தப்பட்ட முனைவர்பட்ட ஆய்வின் அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மதுரை,
சிவங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களாகக்
கொள்ளப்படுகின்றன. அப்பகுதிகளில் கிராமங்கள் அதிகமாக இருப்பதாலும், அவை
நாட்டுப்புற மக்களை அதிகமாகக் கொண்டிருப்பதாலும் இம்மக்கள் வாழ்வில்
கோலாட்டக் கலை வடிவங்கள் பிரிக்க முடியாத கலை பண்பாட்டுக்கூறாக
விளங்குவதாலும் இது ஆய்வுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வுக்களப்
பகுதியில் ஐவகை கோலாட்டக் கலை வடிவங்கள் நிகழ்த்தப்பட்டுவருவதைக் கள
ஆய்வில் அறிய முடிகின்றது. இவை அனைத்தும் ஒரே தன்மை கொண்டவை.
இப்பண்பினாலும் இக்கலை வடிவங்கள் அனைத்தும் கோல்களைப் பயன்படுத்தி
நிகழ்த்தும் தன்மை கொண்டவையாக விளங்குவதாலும் தென்மாவட்டப் பகுதியிலேயே
இன்னும் உயிர்ப்புடன் விளங்குவதாலும் இக்கலை வடிவங்கள் ஆய்வுப் பொருளாக
எடுத்தாளப்பட்டன.
ஆட்டக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தன்
கைகளில் கோலை வைத்துக் கொண்டு. தனக்குத் தானேயும் எதிர்வரும்
கலைஞர்களிடமும் பாடல்-_தாளத்திற்கு ஏற்ப ஓடியும் குதித்தும் வளைந்தும்
நெளிந்தும் ஆடும் ஆட்டம் கோலாட்டமாகும். கோல்களைப் பயன்படுத்தி
நிகழ்த்தப்படுவதால் கோலாட்டம் எனப் பெயர் பெறுகிறது. அவ்வாறெனில்,
சிலம்பாட்டம் எனப்படும் வீர விளையாட்டுக் கலையும் நீண்ட கோல்களைப்
பயன்படுத்தி ஆடும் ஆட்டமாகவே விளங்குவதால், அதனையும் கோலாட்டக் கலை
வடிவங்களில் அடக்கலாமா? எனில் அது தற்காப்பு அடிப்படையிலான வீர
விளையாட்டுக் கலையாகும். போர்ப்பயிற்சியின் அடியொற்றி இது வீரவிளையாட்டுக்
கலையாகவே சிலம்பாட்டம் விளங்குகிறது. ஆனால் தென்மாவட்டக்கலை வடிவங்கள்,
நாட்டுப்புற மக்களின் கலை பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் “கும்மி’’யை
அடியொற்றி வளர்ந்து மக்களின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு வழிபாடு மற்றும்
வாழ்வியல் சடங்குகளில் நிகழ்த்தப்படும் சடங்கு நிலை ஆட்டமாக
விளங்குகின்றன. அதனால், இக்கோலாட்டக் கலைகள் சிலம்பக் கலையினின்று
நிகழ்த்துப் பொருண்மை நோக்கிலும், முறைமை நோக்கிலும் வேறுபடுகின்றன.
நாட்டுப்புற மக்களின் வழிபாடு மற்றும் வாழ்க்கைச் சடங்குகளோடு தொடர்புடைய
நிலையில் நிகழ்த்தப்படும் ஆட்டங்களே கோலாட்டக் கலை வடிவங்களாக்
கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தென்மாவட்டப் பகுதிதியில்; ஐந்து வகை
கோலாட்ட வடிவங்கள் நிகழ்த்தப்படுவதை அறிய முடிகிறன்றது. அவை,
“அயிலந்தரை ஆட்டம்
கழியல் ஆட்டம்
பின்னல் கோலாட்டம்
பிருந்தாவன தீபகேளி ஆட்டம்
வைந்தானை ஆட்டம்’’
என்பவையாகும். இவ்வைந்தும் “கோல்களைக்
கொண்டு, அடித்து பாடல்-_தாளத்திற்கு ஏற்ப ஒரே வகை நோக்கம் கருதி
நிகழ்த்தப்படும் கோலாட்டக் கலை வடிவங்களாகும். அவற்றில் அயிலந்தரை, கழியல்,
பின்னல் கோலாட்டம், வைந்தானை ஆட்டம் ஆகிய நான்கினையும் கோலாட்டக் கலையின்
வகைகளாகக் குறிப்பிடுகிறார் சு.சண்முக சுந்தரம் (தமிழில்
நாட்டுப்புறப்பாடல்கள்: 1985:245), ஆனால் பிருந்தாவன தீபகேளி என்னும்
வடிவமும் ஆய்வுக்களத்தில் நிகழ்த்தப்படுவது அறியத்தக்கது. எனவே, அதனையும்
சேர்த்து ஐந்து வகையாகக் கொள்ளப்படுகிறது. இவ்வடிவங்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட இனத்தவர்ளால்
நிகழ்த்தப்படுகின்றன. எனினும், இவை அதன் அடிப்படை இயல்புகளில்
ஒத்திருக்கின்றன. இவை அனைத்தும் அந்தந்தப் பகுதி மற்றும் இனமக்களுக்கு ஏற்ப
அந்த பண்பாட்டுக் கலப்புடன் வேறுவேறு பெயர்களில் நிகழ்த்தப்பட்டு வரும்
ஒரே வகை ஆட்டமாகும். ஆகவே இவ்வைந்து வகையினையும் கோலாட்டக் கலை வடிவங்கள்
என்னும் ஒரே வகைப்பாட்டில் ஆராயும் பொழுது, தொடர்புடைய வெவ்வேறு பகுதி
மற்றும் வெவ்வேறு சாதி மக்களின் கலை பண்பாட்டு நிலையினையும் தொடர்பினையும்
ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வைந்து வகை கோலாட்டமும் வேறுவேறு
பெயர்களில் வேறுவேறு பகுதிகளில் வேறுவேறு சாதி மக்களால் ஆடப்படினும்
அவற்றின் பொருண்மை நிலையில் முற்றிலுமாக ஒருமித்த தொடர்புடையனவாக
இருப்பதாலும் அவற்றின் தலையாய நிகழ்வான ‘கோலடித்தல்’ என்னும் வினை
கருதியும் அனைவரிடமும் அறிந்திருக்கும் பெயர் கருதியும் ‘கோலாட்டம்’
என்னும் பொதுப் பொருளில் சுட்டப்படுகின்றன. ‘கழி’, ‘கம்பு’, குச்சி
எனப்படும் கோல்களைக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் ‘கோலாட்டம்’ எனப்பெயர்
வந்தது. இவ்வாட்டத்தில் கோல்களே முதன்மைக் கருவியாகும். பிற கருவிகள்
துணைமைக் கருவிகளாகும். கோல்கள் இல்லையெனில், கோலாட்டமே இல்லை.
(ச.முருகானந்தம்: தூத்துக்குடி: நேர்முகம்). இச்சிறப்புக் கருதியே இவ்வகை
ஆட்டத்திற்குக் கோலாட்டம் என்று பெயர் வந்தது.
கோலாட்டக்கலை வடிவங்களின் பெயர்கள்
காரணகாரிய அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.
‘அயிலந்தரை’ என்பது பெண்கள் நிகழ்த்தும் பசவன்விழா தொடர்பான சடங்குமுறை
ஆட்டம் ஆகும். அயில் + அந்தரை என்றும், அயிலம் + தரை என்றும் பிரித்துப்
பொருள் கொள்ளலாம். அயிலம் என்பது ‘அகிலம்’ என்ற சொல்லின் திரிந்த
வடிவமாகும். ‘அகிலம்தரை’ என்பதே ‘அயிலம்தரை’ என்று மாறியுள்ளது. அகிலமே
தரையில் ஆடும் உணர்வை ஏற்படுத்துவதால் இதனை ‘அகிலம்தரை’ என்று அழைத்தனர்.
அதுவே பின்பு அயிலந்தரை என்று ஆனது. பசவன் விழாவில் பெண்கள் நிகழ்த்தும்
இக்கோலாட்டம் அயிலந்தரை என்று வழங்கப்படுவதை இன்றும் காணலாம்.
(திரிபுரசுந்தரி: மதுரை: நேர்முகம்). ‘கழியல்’ என்ற சொல் எடுத்தாளலில்,
முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இதனைக் ‘களியல்’ என்று குறிப்பிடுவாருமுண்டு
(நாமத்துரை: மொத்தன் மொழி: நேர்முகம்) ‘கழியல் நடனம்’ என்று அ.
அன்னசெல்வம் தனது ஆய்வேட்டில் குறிப்பிடுகிறார் (இளம் ஆய்வியல் ஏடு 1986).
இச்சொல்லையே ஜெயரெஜினாவும் எடுத்தாள்கிறார் (இளம் ஆய்வியல் ஏடு 1988).
‘களியலாட்டம்’ என்பதே சரியான சொல் என்கிறார் கு.கதிரேசன் (இளம் ஆய்வியல்
ஏடு 1988:13). இச்சொல்லையே ஞா. ஸ்டீபனும் குறிப்பிடுகிறார். (ஆராய்ச்சி
1989:105). ‘களியாட்டம்’ என்பதன் அடிப்படையில், மகிழ்வுடன் ஆடுதல் எனப்
பொருள்படும்.. குமரி மாவட்டத்தில் இதனை ‘களியலடி’ என்றும், ‘களியல்’
என்றும் அழைக்கின்றனர். இம்மாவட்டப்பகுதியில் ‘களியல்’ என்னும் ஊர் பெயர்
இருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
‘மருமக்கள் வழி மான்மியம்’ நூலில்
தேசிகவிநாயகம்பிள்ளை, “களியல் கூத்தசைக் கம்புகள் இல்லையோ’’ என்ற
அடியின்மூலம் (1965:68). ‘களியல்’ என்ற சொல்லையே எடுத்தாள்கிறார்.
இச்சொல்லையே ஏ.என்.பெருமாளும் (நாட்டுப்புறக் கலைகள் 1980:82) தமது நூலில்
கையாள்கிறார். ‘களி’ என்ற வினையுடன் ‘அல்’ விகுதி சேர்ந்து ‘களியல்’ என்று
ஆனதாக தி. நடராசன் (மதுரை: நேர்முகம்) குறிப்பிடுகிறார். ‘களி’ என்ற
சொல்லுக்கு மகிழ்ச்சி, கள்ளுண்டு களித்தல், என்று பொருளைத் தருகிறது.
(Tamil Lexicon : 1982: Vol.II, 815) ) இவ்வாட்டம் ஆடும் முறையில்
கடுமையைத் தோற்றவிப்பதால் களியல் என்பதே சரியான சொல் என்று கூறுவாரும்
உண்டு. கழி அடித்து ஆடுவதால் கழியலாட்டம் எனப்பெயர் பெற்றிருக்கலாம்.
பின்னர் அது வழக்கில் களியலாட்டம் எனத் திரிந்து வழங்கப்பட்டிருக்கலாம்.
‘களி’ என்று வினைச் சொல்லோடு ‘அல்’ என்ற
விகுதி சேர்ந்து, ‘களியல்’ என்று வந்திருக்க வேண்டும். ஆடிக் களித்தல்
என்னும் வினையை உணர்த்துவதால், களியல் என்ற பெயரே பொருத்தமானது. படைத்தல்
என்பது படையல் என்றும், துவைத்தல் என்பது துவையல் என்றும், பொரித்தல்
என்பது பொரியல் என்றும், குளித்தல் என்பது குளியல் என்றும் வடித்தல் என்பது
வடியல் என்றும், அவித்தல் என்பது அவியல் என்றும் வழங்கப்படுகின்றன.
அவ்வாறே ‘களித்தல்’ என்ற சொல்லும் களியல் என்று ஆகியிருக்கலாம்.
கேரளத்தில் இவ்வாட்டம் கோலடி, கோல்களி
(ஆ.அன்னசெல்வம் (இளம் ஆய்வியல்ஏடு 1986:15) கம்படி களி (சு.சண்முகசுந்தரம்:
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் 1985:15) என வழங்கப்படுகின்றது. இதில்
உள்ள கோல், கம்பு என்ற சொற்கள் மறைந்து, ‘களி’ என்ற சொல்லின்
முக்கியத்துவத்தினால் ‘களித்தல்’ என்று ஆகி, பின் களியல் என்று
மாறியிருக்கலாம். இக்களியலாட்டம், ஆய்வுக் களப்பகுதியில் விளையாட்டு என்று
மாறியிருக்கலாம். இக்களியலாட்டம், ஆய்வுக் களப்பகுதியில் விளையாட்டு என்று
அழைக்கப்பட்டு வருவது இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது. இவ்விளையாட்டு
என்ற சொல் ஆட்டத்தையே குறிப்பிடுகிறது. இக்கலை வடிவங்கள் உருவாவதற்கு
மூலமாக திகழ்ந்த ‘களரிப்பயிற்று’ என்னும் போர்ப்பயிற்சிக் கலை ஒருவகை வீர
விளையாட்டே. ‘தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற நூலில்
சு.சண்முகசுந்தரம், ‘களியல்’, ‘கழியல்’ என்ற இருசொற்களையும்
பயன்படுத்துகிறார் (1985:209, 248) அன்னசெல்வம் என்பவர் ‘கழியல் நடனம்’
என்னும் ஆய்வேட்டில், கழிகளைக் கையில் பிடித்து ஆடுவதால் ‘சுழியல்’ என்ற
பெயரே தமது ‘கழியல்’ பெயரே பொருத்தம் உடையது என்கிறார்.. (1986:16). எனவே
கழியலாட்டம் என்னும் பெயர் தொடர்பாக நாட்டுப்புறவியல் அறிஞர்களிடையே
கருத்து ஊடாட்டம் இருப்பதை அறிய முடிகிறது.
கழி, கோல், குச்சி கம்பு என்ற சொற்கள் ஒரு
பொருளை உணர்த்தும் பல சொற்கள் ஆகும். ‘கழி’ என்பது கோல்களை உணர்த்தும்.
இவ்வகை ஆட்டத்தின் பிரதான கருவியான கழிகளை அடிப்படையாகக் கொண்டு,
இவ்வாட்டம் ‘கழியலாட்டம்’ எனப்படுகிறது. ‘கழி’ என்பது கேரளத்தில்கோல்களை
உணர்த்தும் சொல்லாகும். இவ்வாட்டம், வழக்கில் உள்ள கன்னியாகுமரி,
திருநெல்வேலி மாவட்டங்கள் கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அங்கு
வழங்கப்பட்டு வரும் ‘கழி’ என்ற சொல்லே ஆய்வுக் களத்திலும் கோல்களைக்
குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆட்டத்தின் பிரதான கருவியை
அடிப்படையாகக் கொண்டு, இக்கோலாட்டக் கலைவடிவம் ‘அல்’ என்றும் விகுதி
சேர்ந்து ‘கழியல்’ என்று ஆகியிருக்க வேண்டும். கழி என்பது பெயர்ச்சொல்.
எனவே அதனுடன் ‘அல்’ என்னும் விகுதி சேர்வது பொருந்தாது. அதனால் முதலில்
கழியாட்டம் என்றே இருந்து, பின்பு பேச்சு வழக்கில் ‘கழியலாட்டம்’ என்று
மாறி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கோலாட்டக் குச்சிகளுடன் வண்ணக் கயிறுகளை
இணைத்து, அக்கயிறுகளில் பின்னலை உருவாக்கியும் அவிழ்த்தும் பாடல்
இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் பின்னல் கோலாட்டம் ஆகும். ‘கோலாட்டத்தின் மூலம்,
கயிறுகளில் பின்னல்களை ஆக்கியும் அழித்தும் மகிழ்வதைப் ‘‘பின்னல்
கோலாட்டம்’’ என்பார் க.கண்முகசுந்தரம். பின்னலை உருவாக்கி அவிழ்க்கும்
பணியைப் பிரதானமாகக் கொண்ட கோலாட்டம் என்பதால் இதனைப் பின்னல் கோலாட்டம்
என்று அழைக்கின்றனர். கயிறுகளில் பின்னல்களை ஆக்கியும், அவிழ்த்தும்
ஆடுவதால் இதனைக் “கயிறு பின்னல் ஆட்டம்’’ என்று அழைப்பாரும் உண்டு (சரசுவதி
வேணுகோபால்: மதுரை:நேர்முகம்). இக்ககோலாட்ட முறைகளில் கயிறு பின்னல், என
கலைஞர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக் கொள்ளும் ஆட்ட முறைகள் காணப்படுவதால்,
‘கயிறு பின்னல் கோலாட்டம்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். ‘பின்னுதல்’,
பின்னிக் கொள்ளுதல் என்ற பணியையே ‘பின்னல்’ என்று அழைப்பர். இச்செயற்பாட்டை
இக்கோலாட்டக் கலைவடிவம் முதன்மை இயல்பாகக் கொண்டு விளங்குகிறது.
‘தீபகேளி’ என்பது தீப வழிபாட்டைக்
குறிக்கும். தீபத்தை வைத்து பிரார்த்தனை செய்து வழிபடும் சடங்கு நிலையைத்
‘தீபகேளி’ என்பர். தீபம் என்பதற்கு விளக்கு என்று பொருள். ‘கேளி’ என்பது
கொண்டாட்டத்தை அதாவது கேளிக்கையைக் குறிக்கும். தீபத்தைச் சுற்றி
மகிழ்ச்சியுடன் குதித்து ஆடி மகிழ்வது தீபகேளி ஆகும். சௌராஷ்டரா தேசத்தில்
கிருஷ்ணபகவான், கோபிகளிடம் ராஜகிரிடை செய்தமை ‘பிரிந்தாவன தீபகேளி’ யாகும்.
(கி.நளினி ஆய்வேடு:1984) பிருந்தாவனத்தில் கண்ணன், ராதையுடனும்
ருக்மணியுடனும் கோபியர் பெண்களுடனும் சேர்ந்து ஆடுவதை இக்கோலாட்டக்கலை
வடிவம் பிரதிபலிப்பதாக அறிய முடிகிறது. கண்ணனுடைய பிருந்தாவன ராஜகிரிடை,
ஜலகிரிடை லீலைகளை விளக்கும் ஆட்டம் என்பதால் பிருந்தாவன தீபகேளி
எனப்பட்டது. “கிருஷ்ணன், ராதாவிடம் சிறப்பாக அன்பு செய்து ராதா ருக்மணி,
கோபிகளுடன் கோலாட்டம் நடத்தினார். இப்புராண நிகழ்வே இவ்விழாவிற்கு
அடிப்படையாகும்’’ (எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி மதுரை: நேர்முகம்).
பிருந்தாவன தீபகேளி ஆட்டத்தில்,
ஆட்டத்தின் இயக்கச் செயற்பாட்டு நிகழ்வை, ஆட்டக் கலைஞர்கள் கண்ணனுடைய
பிருந்தாவன லீலைகள் என்றே எண்ணி காரியத்தில் இறங்குகின்றனர். தீபத்தை ஆட்ட
வட்டத்திற்குள் வைத்து வழிபட்டு அதனைச் சுற்றி வந்து ஆடுகின்றனர்.
இந்நிகழ்வில் தீபம் கண்ணனாகக் கொள்ளப்படுகிறது. ஆட்டக் கலைஞர்கள் தங்களை
ராதையாகவும் ருக்மணியாகவும் கோபியர் பெண்களாகவும் எண்ணிக் கொள்கின்றனர்.
இதனால், அவ்வாறு ஒப்பனை செய்வதைக்கூட வழக்காகக் கொண்டுள்ளனர் என்கிறார்
துளசி ராமசாமி. இவ்வாறு பிருந்தாவனத்தில் உள்ள தீபத்தைக் கண்ணனாகவும்
தங்களைக் கோபியர் பெண்களாகவும் எண்ணி, தீபத்தைத் சுற்றி வந்து கேளிக்கை
நிகழ்த்துவதால் ‘பிருந்தாவன தீபகேளி ஆட்டம்’ என்று பெயர் ஏற்பட்டிருக்க
வேண்டும். இது தீபகேளி கோலாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
(மங்கை:19-_11_88:8) இதில், நிகழ்வும் இதன் அடிப்படைத் தன்மையாக அமைவதால்
இதற்குப் ‘பிருந்தாவன தீபகேளி” எனப் பெயர் வந்திருக்கலாம்.
பிருந்தவானத்தில் கண்ணன், பெண்களோடு ஆடி
மகிழ்ந்£தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆட்டக் கலைஞர்கள் தீபத்தைக்
கண்ணனாகவும் தங்களை ராதை ருக்மணி, கோபியர் பெண்களாகவும் கொண்டு கோலடித்துக்
கேளிக்கை நிகழ்த்துவதால் இக்கோலாட்டக்கலை வடிவம், ‘பிருந்தாவன தீபகேளி’ என
அழைக்கப்படுகிறது.
வைந்தானை என்பது ‘வளம்தான்’ என்று
பொருள்படும். ‘வளம்தான்’ என்பதுதான் வளைந்தானை என்று மாறி, வைந்தானை என்று
வழங்கப்பட்டிருக்க வேண்டும். வளம் பெறுவதும், வளம் பெருகுவதும் அதற்குக்
காரணமான மழை வேண்டுவதும் அதற்காக இறைவனை வழிபடுவதுமே இவ்விழாவின் தலையாய
அம்சமாக விளங்குகிறது. வளம்பெறுதல் நோக்கில் இறைவனுக்குப் படையவிட்டு,
ஆடிப்பாடி வழிபடும் சடங்கு நிலை வழக்காறுகளின் வெளிப்பாடாகவே ‘வைந்தானை’
என்ற சொல் தோன்றியிருக்கலாம். இது வைந்து+ஆனை என்று பிரியும். வைந்து
என்பது, நைந்து என்பதன் திரிபே. நைந்து+ஆணை என்பதே வைந்து + ஆணை என்று
ஆகியிருக்கலாம். அதாவது, இவ்விழாவில் இம்மக்கள் வழிபடும் ஐயனாரான
வல்லடிக்காரன், காக்கும் வளமைக் கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறான்.
வேண்டியதைக் கொடுப்பவன், அதனால் பக்தர்கள்அவனிடம் உரிமையுடன ஆணையிட்டுக்
கூறினர். அதாவது நைந்து ஆணையிட்டுக் கூறியதன் அடிப்படையில் நாட்டுப்புற
மக்கள் ‘நைந்தானை’ என்று வழங்கி வந்திருப்பர். பின்பு இச்சொல், நைந்தானை
என்று மாறி தற்பொழுது ‘வைந்தானை’ என்று ஆனது என்பாரும் உண்டு (நல்லுச்சாமி
வல்லடி காரன்பட்டி: நேர்முகம்)
இ. பாலசுந்தரம் வைந்தானை ஆட்டப்
பாடல்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது வசந்தன் பாடல்கள் என்னும் ஆட்டத்தை
வசந்தனாட்டம் என்று குறிப்பிடுகிறார். அவர், இவ்வாட்டத்தை வசந்தன்,
கோலாட்டம், பொல்லடி என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். “ஈழத்தில்
மட்டக்களப்பு பகுதியில் உள்ள இக்கோலாட்டத்தை ‘வசந்தன் கூத்து’ என்கிறார்.
ஆனால், தமிழகத்தில் இவ்வாட்டத்தைக் குறிப்பிடும் ‘வசத்தன்’ என்னும்
சொல்வழக்கு இல்லை. தமிழ்நாட்டில் வழக்கு வீழ்ந்து போன பழைய தமிழ்ச்
சொற்களும் சங்க காலத்து ஒழுக்கங்களும் ஆடலும் பாடலும் ஈழ நாட்டிலேயே
இன்னும் நின்று நிலவுகின்றன என விபுலானந்த அடிகள் கூறுவது, ஈண்டு நினைவு
கொள்ளத்தக்கது’’ என்கிறார் இ. பாலசுந்தரம் (வி.மி.ஞானப்பிரகாசம், சு.ப.
அறவாணன் நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்: 1974:29). மேலும் இந்நடனம்,
வசந்த கால மாதங்களில் சிறப்பாக நிகழ்த்தப்படுவதால் காலவாகு பெயரான
‘வசந்தன்’ எனப்பெயர் பெறுவதாயிற்று. வசந்த காலத்திற்குரிய ஆடலோடு
பாடலாதலின் ‘வசந்தன் கவி’ காலத்தினாற் பெற்ற பெயராகும் என்றார் அவர்.
கோலாட்டத்தைப் பெரும்பாலும் கிராமங்களில்
நடக்கும் வசந்தகால விளையாட்டு என்றே கூறலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது
(1959:தொ.4:37). இக்கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு சிலர்
வசந்தன் விழா என்பதுதான் வைந்தானை விழா என்றும் வசந்தன் ஆட்டம்தான்
வைந்தானை ஆட்டம் என்றும் மாற்றம் பெற்றன என்கினறனர்.
(தி.நடராசன்:நேர்முகம்) தென்னிந்தியாவில் இது கோலாட்டம் என்று
வழங்கப்படுகிறது. (சுரேந்திரன்: நேர்முகம்) ஆண்கள் ஆடும் கோலாட்டத்தில்
வைந்தானை என்ற வகையுமுண்டு எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. (1959 தொ.4:37,
38) “தமிழகத்தில் இதனைப் பெண்கள் ஆடும்பொழுது, கோலாட்டம் என்றும், ஆண்கள்
ஆடம்பொழுது வைந்தானை என்றும் கூறும் மரபு சிந்தித்தற்குரியது.
மட்டகளப்பில், ஆண்கள் ஆடும் வசந்தன் கூத்திற்கும், தமிழகத்தில் ஆண்கள்
ஆடும் வைந்தானைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் இ. பாலசுந்தரம் (வி.மி.
ஞானப்பிரகாசம், க.ப. அறவாணன்: நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள் 1974:29)
தற்பொழுது ஆய்வுக்களத்தில்
நிகழ்த்தப்பட்டுவரும் வைந்தானை விழாவும் ஆட்டமும் வசந்த காலத்தில் _ அதாவது
தை, மாசி, பங்குனி மாதங்களில் நிகழ்த்தப்படுவதால் வசந்தன் விழா வசந்தன்
ஆட்டம் என்று முதலில் இருந்து, பின் வைந்தானை விழா, வைந்தானை ஆட்டம் என்று
மாறியிருக்கலாம் என்பாரும் உண்டு. இ. முத்தையா மதுரை: நேர்முகம்) தமிழ்க்
கலைச் சொல் அகராதியில் ‘வைந்தானை’ என்ற சொல்லின் பொருள்
குறிப்பிடப்படவில்லை. ஆய்வுக்களத்தின் இன்றைய சூழ்நிலையையும் மக்களின்
வாழ்க்கை நிலையையும் தகவலாளர்களின் கூற்றுக்களையும் வைந்தானை ஆட்டத்தின்
இயல்புகளையும் அதன் பாடற்பொருளையும் வழிபாட்டு நிலைகளையும் கருத்தில்
கொண்டு நோக்கின், முதலில் குறிப்பிட்டது போன்று இவ்விழாவும் ஆட்டமும்
‘வளம்’ வேண்டி நிகழ்த்தப்படும் விழாவாகவும் ஆட்டமாகவும் அமைவதால் இது
‘வளம்தானை’ என்று இன்று, பின்பு வைந்தானை என்று மாறி வழங்கப்பட்டுள்ளது
என்ற முடிவுக்கு வர இயலுகிறது. இங்குக் கருவிகளின் அடிப்படையில்
பெயரிடப்படாமைக்குக் காரணம், அதை விட அவ்விழா மற்றும் ஆட்டத்தின் நோக்கப்
பொருண்மை மேம்பட்டு நிற்பதால் அதன் அடிப்படையில் பெயர் வழக்கு
உருவாகியிருக்கலாம் என்று கொள்ள இடமேற்படுகிறது.
கோலாட்டக் கலைவடிவங்கள் தமிழகத்தின்
தென்மாவட்டப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக வெவ்வேறு
பெயர்களுடன் நிகழ்த்தப்படுவதைக் காணலாம். இந்தியாவின் பிற மாநிலங்களிலும்
பிற உலக நாடுகளிலும் கூட கோலாட்டக் கலைவடிவங்கள் வழக்கில் உள்ளன. இக்கலை
வடிவங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றாற்போன்று இயல்புகளைப்
பெற்றிருந்தாலும், வேறுவேறு பெயர்களுடன் வழங்கப்பட்டாலும் அவை, ‘கோல்’
என்னும் முதன்மை ஆட்டக்கருவியின் அடிப்படையில் ஒரே நிகழ்த்துக் கலைவடிவமாக
வழங்கப்படுகிறது. இக்கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு ஆராயும்பொழுது,
கோலாட்டக்கலை வடிவங்கள், தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும்
பிற நாடுகளிலும்கூட நிகழ்த்தப்பட்டு வந்தமை அறியலாகிறது.
கோலாட்டக் கலையானது. தமிழ் மண்ணில், தமிழ்
மக்களால், தமிழ்ப் பண்பாட்டின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட நிகழ்த்து
கலையாகும். நாட்டுப்புற மக்களின் தொன்மைத் தொழிலான வேட்டையாடுதல்,
போரிடுதல் என்பவற்றின் பயிற்சி முறைகளை அடியொற்றி எழுந்த தற்காப்பு மற்றும்
வீரவிளையாட்டுக் கலைகளின் இயல்புகளையும் காலம் காலமாகச் சடங்கு நிலையில்
பெண்களால் நிகழ்த்தப்பட்டு வந்த கும்மி ஆட்டத்தின் இயல்புகளையும் பெற்று
புதிய கலை வடிவமாக உரிப்பெற்ற நிகழ்த்து கலையே கோலாட்டமாகும். இந்த
அடிப்படையிலேயே இக்கலை வடிவங்கள் கும்மியைப் போன்று சடங்கு நிலை ஆட்டமாக
வளர்ந்தது கும்மியைப் பெண்கள் நிகழ்த்தியவாறு கோலாட்டத்தை ஆண்கள்
நிகழ்த்தியிருக்க வேண்டும். எனவேதான் இக்கோலாட்டக் கலைவடிவங்களில்
ஆடவர்களின் வாழ்க்கை மரபோடு நெருங்கிய தொடர்புடைய வேட்டை மற்றும் போர்ப்
பயிற்சிக் கூறுகள் அதிகமாகக் கலந்திருக்கின்றன. சான்றாக, இன்றைய நிலையில்
வழக்கிலிருக்கும் கோலாட்டக் கலைவடிவங்களில் அதிகமாகக் கலந்திருக்கும்
தற்காப்பு மற்றும் வீரவிளையாட்டுக் கலைகளின் இயல்புத் தாக்கத்தைக்
குறிப்பிடலாம். அந்த வகையில் பெண்கள் சடங்கு நிலைச்சூழல்களில் கைகளைக்
கொட்டி ‘கும்மி’யை நிகழ்த்தினர். ஆடவர்கள் தற்காப்புக் கருவிகளில் ஒன்றான
கோல்களைக் கொட்டி சடங்கு நிலையில் இக் கோலாட்டத்தை நிகழ்த்தி வந்துள்ளனர்.
இக்கோலாட்டக் கலையின் பல கூறுகள் தற்காப்பு மற்றும் வீரவிளையாட்டுக் கலையான
‘களரி’ மற்றும் அதனுள் ஒரு பகுதியாக விளங்கும் ‘சிலம்பம்’ ஆகியவற்றின்
தன்மைகளுடன் அமைந்திருப்பதை இனம் காண முடிகிறது.
கோலாட்டக் கலைவடிவங்களின் பயிற்சி
முறைகள், குரு வணக்கநிலை முதலிய கூறுகள் களரிப்பயிற்று என்னும் தொன்மையான
போர்க்கலையின் பயிற்சி முறைகளையும் குரு வணக்கத்தையும் ஒத்திருக்கின்றன.
கோலாட்டக் கலைஞர்களுக்குக் குரு தன் கையினால் ‘கோல்’களை எடுத்துக்
கொடுப்பது களரிப் பயிற்றில் ‘குரு’ கச்சை கட்டிவிடும் தன்மையை
உணர்த்துகிறது. மேலும் கோலாட்டக் கலைஞர்கள், தரையைத் தொட்டு வணங்குவது
களரிப் பயிற்றில் உள்ள சாஸ்ட்டாங்க குருவணக்கத்திலிருந்து வந்திருக்க
வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. கோலாட்டக்கலைவடிவங்களில் கோல்களின் இயல்பு
களரிப் பயிற்றில் ஒரு பகுதியாக விளங்கும் சிலம்பாட்டத்தின் கோல்களோடு
தொடர்புடையது. இரு கலை வடிவங்களிலும் கோல்களின் சுற்றளவு ஒன்றரை அங்குலம்
அளவே அமைந்துள்ளது. ஆனால் நீளம் மட்டும் வேறுபடுகிறது. கோலாட்டக்
கலைவடிவங்களில் ஒன்று முதல் இரண்டு அடி கோல்களும் களரிப்பயிற்றில் சுமார்
நான்கு முதல் ஐந்து அடி கோல்களும் பயன்படுத்தப் படுகின்றன. கோலாட்டக்
கலைவடிவங்களில் தவில், மிருதங்கம் முதலிய தோற்கருவிகள் பயன்படுத்தப்படும்
தன்மை, களரிப்பயிற்றில் உருமி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தும் தன்மையை
ஒத்த வழக்காறு ஆகும்.
கோலாட்டக் கலைவடிவங்கள் நிகழ்வு
இடம்பெறும் வழிபாடு தொடர்பான சடங்குநிலைச் சூழலே களரிப்பயிற்று நிகழ்த்தும்
சூழலாக அமைகிறது. மேலும் கோலாட்டக் கலைவடிவங்களில் வழக்கில் உள்ள ‘அடவு’
என்னும் சொல்லும் அடவு முறைகளும் களரிப் பயிற்றின் உத்தி முறைகளை
முழுமையாகப் பிரிதிபலிப்பதாக அமைகின்றன. களரிப்பயிற்றின் அடவுகள், பின்னால்
வந்த நாட்டுப்புறக் கலைகளின் கூறுகளாக அமைந்தன (பத்மா சுப்பிரமணியம்
பரதநாட்டியம்: 1985) என்ற கருத்து இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது.
களரிப் பயிற்றிலிருந்து தனி கலையாக உருவான தற்காப்புக் கலையே சிலம்பக்கலை.
எனவே, களரிப்பயிற்றின் அத்தனை இயல்புகளையும் சிலம்பக் கலையும்
பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களும்
கருத்துக்களும் கோலாட்டக் கலைவடிவங்கள் இன்றைய கேரளாவிலும் அதோடு ஒட்டிய
தமிழகப்பகுதிகளிலும் வழக்கிலிருக்கும் போர்க்கலை வடிவங்களான களரிப் பயிற்று
மற்றும் சிலம்பக் கலையின் இயல்புகளுடன் அவற்றின் தாக்கம் பெற்றுத்
தோன்றியவையே என்ற கருதுகோளைத் தெளிவாக்குகின்றன.
இக்கருத்துக்களினடிப்படையில் தற்போதைய கேரள நிலப்பகுதியை உள்ளடக்கிய
பண்டைத் தமிழ் மண்ணே இக்கோலாட்டக் கலைவடிவங்களின் தாயகமாக இருக்கலாம் எனக்
கொள்ள இடமேற்படுகிறது.
கோலாட்டக்கலை, பெண்கள் கும்மியை மிகவும்
பிரதான சடங்குநிலைக் கலையாகக் கொண்டு நிகழ்த்தி வந்த சூழலின் அடிப்படையில்
ஆடவர்கள் அதன் இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு கோல்களைப் பயன்படுத்தி
அவர்களின் தொழில் மற்றும் இயற்கையான இயல்புக்கு ஏற்ப வீரவிளையாட்டுக்
கூறுகளைக் கலந்து ஒருசில மாற்றங்களை உருவாக்கி நிகழ்த்திய கலையாகும்.
ஆய்வுக்களத்தில் இக்கோலாட்டக் கலைவடிவங்களை நிகழ்த்துவதில் ஆண்களே அதிகமாக
ஈடுபட்டிருக்கும் தன்மையும் ஒரே வகையான சடங்குநிலைச் சூழல்களில் பெண்கள்
கும்மியையும் ஆண்கள் கோலாட்டத்தையும் நிகழ்த்தும் வழக்காறும்
மேற்குறிப்பிட்ட கருத்தை உறுதிப்படுத்துகின்றன. மேலும் கழியல், பிருந்தாவன
தீபகேளி வைந்தானை ஆகிய கடினமான வடிவங்கள் ஆண்களாலேயே நிகழ்த்தப் படுவதும்
பெண்கள் அயிலந்தரை, பின்னல் கோலாட்டம் ஆகிய எளிமையான வடிவங்களையே
நிகழ்த்துவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவை.
“எட்டுச் சிறுவர் கூடி இன்பமாய்க்
கழியலாடி’’. பின்னும் கோலாட்டப் பாடல் ஒன்று ஆண்பிள்ளைகளே கோலாட்டத்தைக்
கற்று நிகழ்த்திய செய்தியைப் புலப்படுத்துகிறது. மேலும் இலக்கியங்களில்
பெண்கள், கும்மி கொட்டியதற்கான பழஞ்சான்றுகள் கிடைக்கும் அளவுக்குக்
கோலாட்டம் நிகழ்த்திய சான்றுகள் இல்லை. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த
காஞ்சி புராணத்தில் ‘செவ்வாய்ச்சியர் கோலாட்டம்’ என்ற குறிப்பு
கிடைக்கிறது. இச்செய்தி, கண்ணன் பிருந்தாவனத்தில் பெண்களுடன் கோலாட்டம்
செய்ததாகக் கூறப்படும் புராணச் செய்தியின் அடிப்படையில் எழுந்ததாகக்கூட
இருக்கலாம். எனவே கோலாட்டம் தொன்மைக் காலத்தில் ஆண்களால் நிகழ்த்தப்பட்டதா?
பெண்களால் நிகழ்த்தப்பட்டதா-? என்பதில் முடிவுச்சிக்கல் எழுகிறது. இவ்வாறு
சரியான சான்றுகள் கிடைக்காத நிலையில், இவ்வாட்டம் இன்றைய நிலையில்
நிகழ்த்தப்படும் முழுமையான கூறுகளின் அமைப்பைக் கருத்தில் கொண்டு, அவை
உணர்த்தும் பண்புகளின் அடிப்படையில் ஒரு முடிவைக் கொள்வது பொருத்தமாக
அமையும். இது காரண காரிய ஊகத்தின் அடிப்படையில் கொள்ளும் முடிவு என்பது
நினைவில் கொள்ளத்தக்கது. பெண்கள், சடங்கு நிலையில் ஒரு கலையை நிகழ்த்தத்
துடித்த அடிப்படை உணர்வினால் கோலாட்டத்தை உருவாக்கி அதே சடங்கு நிலைச்
சூழல்களில் நிகழ்த்தியிருக்கலாம். தற்காலத்தில் இக்கலை பயில்முறைக் கலையாகி
பின் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் தொழில்முறைக் கலையாகி இன்று
வழக்கிழந்து போய்க் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதனைக் காப்பதும்
வளர்ப்பதும் அவசியமாகும்.
நாட்டுப்புற மக்களிடம் வழக்கிலிருக்கும்
கோலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம்,
அனுமானாட்டம், கரடி ஆட்டம், புலி வேடம் முதலிய ஆட்டங்கள் போலச் ‘செய்தல்’
அடிப்படையில் நிகழ்த்தப்படுபவையே. இந்நியதியின் அடிப்படையில், போருக்குச்
செல்வதற்குமுன் பயிற்சி எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற
நிலையின் காரணமாக பயிற்சியின் அவசியம் பற்றிய நம்பிக்கை வளர்ந்தது. இதன்
காரணமாகப் போர்ப் பயிற்சியை அத்தியாவசியமாகச் செய்யும் நிலை உருவானது. எனவே
போரிடுவது போல் பாவனை செய்து ஆடினர். அதன் விளைவாக வீரக்கலைகள் பல, போலச்
செய்தல் அடிப்படையில் பாவனை ஆட்டமாக சடங்கு நிலையில் நிகழ்த்தப்பட்டன.
போர்ப்பயிற்சியை உணர்த்தும் வீரக்
கலைகளைப் போன்று கருவிகளைப் பயன்படுத்தியும், பல்வேறு இயக்க நிலைகளைப்
பின்பற்றியும் எதிரிகளைப் பாய்ந்து தாக்குவது போன்றும் கொல்வது போன்றும்
‘பாவனை’ ஆட்டங்களை நிகழ்த்த ஆரம்பித்தனர். இந்த நியதியை மேற்கொண்டால்
வெற்றி நிச்சயம் என்று நம்பியதன் பயனாக அது கட்டாயச் சடங்காக மாறியது. எந்த
ஒரு செயலையும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அத்தியாவசியமாகவும் கட்டாயமாகவும்
மேற்கொள்ள வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தும்பொழுது, அது சடங்குநிலையை
அடைகிறது. அந்த அடிப்படையிலேயே வீரக்கலைகளாக இருந்த போர்ப்பயிற்சிக்
கூறுகள் சடங்குநிலை ஆட்டங்களாக மாறின. இந்தப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட
கோலாட்டக் கலை வடிவங்களும் மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே
விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் கருத்துக்களின் அடிப்படையிலேயே
விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் கருத்துக்களின் அடிப்படையிலேயே
விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் வீரக்கலைகளின் கூறுகளையும்
கும்மியின் தன்மைகளையும் பெற்று ஒருவகை பாவனை ஆட்டமாக இக்கோலாட்டக் கலைகள்
உருவாகி, சடங்குநிலை ஆட்டமாக நிகழ்த்தப்பட்டன. சடங்குமுறைச் சூழலில்
நிகழத்தப்பட்டபொழுது நாட்டுப்புறமக்கள் தங்கள் வேண்டுதல்களையும்
இறைப்பற்றையும் புராணக்கதைகளின் ஈடுபாட்டையும் வளமை நோக்கத்ததையும்
பாடல்களாகப் பாடி அவற்றிற்கேற்ப கருவிகளின் இசையைச் சேர்த்து ஒரு
நிகழ்த்துக் கலையாக வடிவமைத்தனர்.
சடங்கு நிலை ஆட்டமாக உருவாகி, வழிபாட்டுச்
சடங்குகளில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்த கோலாட்டக்கலை வடிவங்கள், பயில்
முறைக் கலையாக மாறி மக்களின் பல்வேறு வாழ்க்கை சடங்குகளிலும்
நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு ஆட்டத்தின் சூழல் மாறும் பொழுது, அதன் தன்மைகளும்
மாற்றமடையும். வழிபாட்டுச் சடங்கு நிகழ்வுகளில் சடங்காக நிகழ்த்தப்பட்ட
கோலாட்டக் கலை வடிவங்கள் பாடல், இசைக் கூறுகளைச் சேர்த்து நிகழ்த்தப்படும்
கலை வடிவமாகப் பரிணமித்தது. நாட்டுப்புற மக்கள், தெய்வ விழாக்களில் சடங்காக
இக்கலை வடிவங்களை நிகழ்த்தப்படும் கலை வடிவமாகப் பரிணமித்தது. நாட்டுப்புற
மக்கள், தெய்வ விழாக்களில் சடங்காக இக்கலை வடிவங்களை நிகழ்த்தும் பொழுது
அவர்களது எண்ணங்கள், சமயச் சிந்தனைகள், வேண்டுதல்கள், முறையீடுகள்,
பிரச்சனைகள் முதலியவற்றை இசைக் கருவிகளின் இசைக்கேற்பப் பாடி அதற்கேற்ப
நிகழ்த்தும் தன்மை பெறும் பொழுது, ஆட்டத்தின் ‘சடங்கு நிலை’ என்ற
தன்மையிலிருந்து மாறி கலை ஆர்வத் தன்மையைப் பெற்றன. அதாவது வட்டமாக
அமர்ந்து கண்டும் கேட்டும் இன்புறும் வகையில் ஒரு கலை வடிவமாக மாறியது.
அந்நிலையில்தான் திருமணம், பூப்பு நீராட்டு, இறப்புச் சடங்கு முதலிய
வாழ்க்கைச் சடங்குகளில் ஆடப்பட்டு வந்தன. எனவே, இந்நிகழ்த்து முறைமை கருதி,
மரபு நிலையாக வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய மக்களே கற்று வந்த இக்கலையை
சமூக மக்கள் ஒவ்வொருவரும் கற்க ஆரம்பித்தனர். அவ்வாறு மரபு நிலைக்
கலைஞர்களிடம் பயின்று, கலை ஆர்வ நோக்கில் நிகழ்த்தப்பட்டதால் இக்கலை
பயில்முறைக் கலையாக மாறியது.
“சமுதாய வளர்ச்சியினால், உடமையாளர்
உடமையற்றோர் என்ற இரு பிரிவுகள் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்டபின், கூட்டு
நடனம், கூட்டமைப்பிலிருந்து தோன்றிய கலைகள் உடமையற்றோரிடையே பழங்கால
எச்சமாக நின்றன. இக்கூறுபட்ட சமுதாயத்தில் தனித்திறமையுடைய கலைகள்
வளர்க்கப்பட்ன. கலைஞர்களது கலைத்திறமை ஒரு தொழிலுக்கு அடிப்படையாயிற்று’’
என்பார் நா. வானமாமலை (ஆராய்ச்சி 29.78:88) ஒரு கலை, தொழிலாக மாறும் பொழுது
பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பணமதிப்புச் சமுதாயத்தில் தொழில் என்பது
பணம் ஈட்டும் கருவியாகவே விளங்குகிறது. இந்நிலையில் பணம் திரட்டும்
வழிமுறையைக் கண்ட கலைஞர்கள், மக்களிடம் கலைகளுக்கு இருந்த செல்வாக்கினால்
அவற்றைத் தொழில் முறையாக நிகழ்த்திப் பணம் திரட்ட ஆரம்பித்தனர். இந்த
அடிப்படையில் வாழ்க்கைச் சடங்குகளில் கலை ஆர்வ நோக்கில் பயில்முறைக் கலையாக
நிகழ்த்தப்பட்டு வந்த கோலாட்டக் கலை வடிவங்களும் ஆட்டக் கலைக் தொழிலாகப்
பல்வேறு சூழல்களில் நிகழ்த்தப்பட்டன.
இந்நிலையில், கலைத் தன்மையை விட, வருமானமே
கலைஞர்களுக்கு முக்கியமாகப்பட்டது. எனவேதான், கோலாட்டக் கலை வடிவங்களில்
பல மாற்றங்களை மேற்கொண்டனர். இம்மாற்றங்கள், காலத்திற்கு ஏற்பவும் மக்களின்
இரசனை உணர்வு, விருப்பத்திற்கு ஏற்பவும் அமைந்தன. பணம் கொடுப்பவர்களைப்
புகழ்ந்தும், வாழ்த்தியும் அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்பப்
பாடல்களையும் ஆடல்களையும் மாற்றி அமைத்தும் செயல்படக் கூடிய நிலை உருவானது.
அந்தச் சூழலுக்கு ஏற்பவே பல பாடல்கள் உடனுக்குடன் உருவாக்கிப் பாடப்பட்டன.
ஒருவர் இந்து, கிறித்தவம், இசுலாம் முதலிய எல்லா சமயப் பாடல்களையும்
தெரிந்து வைத்திருக்கும் நிலை உருவானது. இந்நிலையில் கலை நோக்கத்தை விட்டு
பண நோக்கத்தையே சிறப்பாகக் கொண்டு செயற்கையாக ஆடும் தன்மை வளர்ந்தது.
கோலாட்டக்கலை வடிவங்கள் பயில்முறைக்
கலையாக இருந்த நிலையில், பணத்திற்காக அல்லாமல், தன் திறனைக் காட்ட வேண்டும்
என்ற நோக்கில் “தன்னைப் பாராட்ட வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும்’’ என்ற
எண்ணத்தில் கலைஞர்கள் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஆடினர். (சி.
கனகசபாபதி: மதுரை : நேர்முகம்) ஆனால், தொழிலாக மாறியதால் கலை ஆர்வம்
மறைந்தது. எதையாவது, எப்படியாவது ஆடி நேரத்தைக் கடத்தி, பணத்தைப் பெற்றுச்
செல்ல வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. எனவே கலைஞர்கள் வருமான அடிப்படையில்
செயல்பட்டனர். “திறனைக் காட்டல்’’ என்பதை விட “வருவாய் பெறல்’’ என்பதே
நோக்கமாக அமைந்தது.
பயில்முறைக் கலை நிலையில் இருந்து, தொழில்
நிலைக்கு வந்தபின் அவற்றின் சிறப்புத்தன்மை குன்ற ஆரம்பித்தது. திரைப்படத்
துறையின் தாக்கத்தினாலும் பிற கலைவடிவங்களின் கலப்பினாலும் புதிய இ¬ச்
கருவிகளின் பயன்பாட்டினாலும் அதன் மரபு நிலை அழிந்தது. இவ்வாட்டம்,
பயில்முறைக் கலையாக இருந்தபொழுது, குழுனரிடையே உறவு மிக நன்றாக இருந்தது.
குரு_சீடர் உறவு முறைக்குத் தனிப்பெருமை இருந்தது. தொழில் முறை கலையாக
மாறியபின் இப்பண்பாட்டு நிலைகள் அடியோடு மறைந்தன. கலைஞர்களால்தான்
குழுத்தலைவர் பணம் பெறுகிறார் என்ற எண்ணம் வளர்ந்தது. அதனால்,
ஆசிரியர்_மாணவர் என்ற உறவுநிலை கெட்டு, பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டது.
இவ்வாறு கோலாட்டக் கலை வடிவங்கள் பயில்முறைக் கலை நி¬லியிருந்து தொழில்
நிலைக்கு வந்தமையால், அதன் மரபு நிலை கெட்டு இன்றைய சூழலில் மதிப்பிழந்து
காணப்படுகிறது. அதனை மீண்டும் வளர்த்தெடுப்பதும் ஆவணப்படுத்துவதும்
காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி ஐயா தங்கள் அருந்தமிழ்ப் பணிக்கு - வணக்கம்
ReplyDeleteஅகநம்பி தி பாலசுப்பிரமணியன் கல்பாக்கம் 9585480754