நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வகைகள்
|
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பல்வேறு
ஆய்வாளர்கள்
பல்வேறு முறைகளில் வகைப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் ஏ.என். பெருமாள்
நிகழ்த்து
கலைகளில் கலந்துகொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு
தனியார் கலை(Individual art), குழுவினர் கலை(group art) என்றும்
பிரித்துள்ளார். மயிலாட்டம்
குதிரையாட்டம், கரடியாட்டம், நொண்டி நாடகம் போன்றவை தனியார் கலைகளாக
அமைகின்றன. வில்லுப்பாட்டு, தேவராட்டம் தெருக்கூத்துப் போன்றவை குழுவினர்
கலைகளாக அமைகின்றன
என்கிறார். கலந்துகொள்ளும் கலைஞர்களின் பால்(Sex) அடிப்படையில் ஆடவர் கலை,
மகளிர்
கலை, ஆடவர் - மகளிர் கலை என்றும், நிகழ்த்தப்படும் காலம், சூழல், நோக்கம்
ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு சமூகம்சார் கலைகள்(Society based arts), சமயம்சார்
கலைகள்(Religion based arts) என்றும் பலவாறாகப் பிரித்துக்
கூறிவிட்டு, ‘கலைகளை
வகைப்படுத்துவது சிக்கலானது’ என்றும் கூறுகிறார்.
|
முனைவர் ஆறு. இராமநாதன்(2001) நாட்டுப்புற நிகழ்த்து
கலைகளை, அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், ஆ. ஆட்டங்கள் என்று இரு பெரும்
பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார்.
|
அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள்
|
நாதசுர இசைக் கச்சேரிகள்(நாட்டுப்புற நாதசுரம், நாட்டுப்புற
மேளம் கொண்டவை). கே.ஏ. குணசேகரன், விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன்,
கோட்டைச்சாமி, புஷ்பவனம் குப்புசாமி போன்றோரின் பாடல் நிகழ்ச்சிகள் இந்தப் பிரிவில்
அடங்குவன.
|
ஆ. ஆட்டங்கள்
|
ஆட்டங்கள் என்னும் இந்தப் பிரிவு கருவி இசை
ஆட்டங்கள், பாட்டு ஆட்டங்கள், அரங்கக் கலைகள், கதை கூறல், போர்க் கலைகள்,
வித்தைகள் என ஆறாக
வகைப்படுத்தப்படுகின்றன.
|
1. கருவி இசை ஆட்டங்கள் : கருவி இசைக்கேற்ப ஒருவரோ பலரோ
ஒப்பனையுடன் ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். கரகாட்டம், பொய்க்கால் குதிரை
ஆட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், கரடி ஆட்டம், வழியாட்டம், புலி வேடம்,
ஒப்பாட்டம், காளி திருநடனம், கொக்கலிக்கட்டை ஆட்டம், வீரபத்ரசாமி ஆட்டம்,
தேவராட்டம், சேவையாட்டம் இவை இவ்வகையில் அடங்கும்.
|
கரகாட்டம் : கரகம் என்பதற்குப் ‘பூக்குடம்’ என்று பொருள்.
கரகம் வைத்து ஆடுகின்ற ஆட்டம் கரக ஆட்டமாகும். கிராமத் தேவதைகளுக்கு நடக்கும்
திருவிழாக்களில் குறிப்பாக மாரியம்மன் திருவிழாக்களில் பக்தர்கள் கரகமெடுத்து
ஆடுவர். பொழுதுபோக்குக் கலைஞர்களும் இதை ஆடி வருகின்றனர். பொதுவாக இவ்வாட்டம்
ஆண்களுக்கே உரியது. தற்போது பெண்களும் பங்கு கொள்கின்றனர்.
|
காவடி ஆட்டம் : கோவில் திருவிழாக்களிலும் ஊர்வலங்களிலும்
தெருக்களில் காவடி ஆட்டம் நடைபெறும். இதனை இரண்டு வகையாகக் கூறலாம். கந்தன்
தொடர்பானது ஒன்று. மற்றொன்று கலை தொடர்பானது. கந்தன் தொடர்பான ஆட்டத்தில் தங்கள்
வேண்டுதலை நிறைவேற்ற முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்வர்.
|
கலை தொடர்பான காவடி ஆட்டத்தில் கலைஞர்கள்
பங்குபெறுவர்.
இவர்களின் காவடிதண்டு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆட்டக்காரர்கள்
காவடியைத் தலை உச்சி, நெற்றி, மூக்கு நுனி ஆகியவற்றில் நிறுத்திக்
காட்டுவர். நையாண்டி மேளத்திற்கு ஏற்ப இவர்கள் காவடியோடு ஆடுவது சிறப்பாக
இருக்கும். ஆண்களே
ஆடுவர்.
|
பொய்க்கால் குதிரை ஆட்டம் :
இதனைப் புரவி ஆட்டம் என்றும்
அழைக்கின்றனர். அட்டைகளாலும் மூங்கில் கீற்றுகளாலும் குதிரை உருவத்தைச்
செய்து அதன்
முதுகுப் பகுதி நடுவில் ஒரு மனிதன் நிற்கும் அளவுக்கு ஈடாக இடம்விட்டுப்
வைப்பர். அதற்குள் ஆடுபவர் புகுந்து நின்று குதிரையைப் பிடித்திழுத்து
ஆடுவார். கால்களில்
மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆணும் பெண்ணும் அரசன், அரசி வேடமிட்டுப்
புரவி ஆட்டம்
ஆடுவர். இதன் தாயகம் தஞ்சை.
|
2. பாட்டு ஆட்டங்கள் : கருவி இசையோடு பாடல்கள் பாடிக்கொண்டு
அல்லது பிறர் பாடும் பாட்டிற்கேற்றபடி ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். குறவன்
குறத்தி ஆட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பேயாட்டம், சாமியாட்டம், கருப்பாயி ஆட்டம்,
பாம்பு நடனம், கைச்சிலம்பாட்டம், உறியடி, மயானக் கொள்ளை, கோணங்கி ஆட்டம் போன்றன இவை
.
|
கும்மி ஆட்டம் : வட்டமாக நின்று பெண்கள் கைகளைக் கொட்டி
ஆடும் ஆட்டமே கும்மி ஆட்டம். பாடல்களைப் பொறுத்தும் பனைமரக் கும்மி, ஒயில் கும்மி,
முத்து வீராயிக் கும்மி என்று பலவாறு கும்மி ஆட்டம் பெயர் பெறும். தீபக்கும்மி,
முளைப்பாரிக் கும்மி என்று சூழலைக் கொண்டும் கும்மிகள் பெயர் பெறும்.
|
கோலாட்டம் : சிறிய வண்ணக் கோல்களை அடித்து ஆடுவது கோலாட்டம்.
இதுவும் பெண்களின் ஆடல். கோல்களில் பொதுவாகச் சிவப்பும் பச்சையும் பூசி
இருப்பார்கள். பெண்கள் வட்டமாக நின்று ஆடுவர். பாடிக்கொண்டே கோல்களை அடிப்பதும்,
முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடிப்பதும், குனிந்து நிமிர்ந்து அடிப்பதும்,
கைகளை உயர்த்தியும், தாழ்த்தியும் அடிப்பதும் எனப் பலவகைகளில் ஆடுவர்.
|
ஒயிலாட்டம் :
ஒயில் என்றால் அழகு. இது அழகு நிறைந்த ஆடல்.
ஆண்கள் ஆடுவது. ஆட்டக்காரர்கள் பளிச்சென்ற வர்ணங்களில்
சட்டைகள், காற்சட்டைகள், கழுத்துப் பட்டைகள்
அணிந்திருப்பர். ஆபரணங்களும் பூட்டியிருப்பர். கைகளில் வண்ணக்
கைகுட்டை பிடித்திருப்பர். கால்களில் சலங்கை அணிந்திருப்பர். பாட்டின்
வேகத்திற்கு
ஏற்பக் கைகளை அசைத்து அசைத்து வேகமாக ஆடுவர்.
|
கிராம நாடகம், மகாபாரதம், முருகன் - வள்ளி, காத்தவராயன்,
மதுரைவீரன் போன்ற கதைகளைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்கள். கிராமத்துக் கோவில்
விழாக்களில் இது பெரும்பாலும் நடைபெறும்.
3. அரங்கக் கலைகள் : மரபுவழியாக வழங்கிவரும் ஏதேனும் ஒரு கதையை
அடிப்படையாக வைத்து அக்கதைப் பாத்திரங்களாக வேடம் புனைந்து கொண்டு கருவி இசையின்
துணையுடன் ஆடியும் பாடியும் பேசியும் நடித்தும் அரங்கத்தில் நிகழ்த்தக்கூடிய கலைகள்
அரங்கக் கலைகள் ஆகும். தெருக்கூத்து, கணியான் கூத்து, பகல் வேடம், பாவைக் கூத்து
போன்றன இவை.
|
தெருக்கூத்து : இது தெருவில் திறந்தவெளியில்
நிகழ்த்தப்படுவது. இதற்கு மேடையும் திரையும் கிடையாது. தெருக்கள் கூடும் சந்தியில்
கம்பங்களை நட்டு விளக்குகளைக் கட்டி ஆட்டக் களரியை உருவாக்குவர். ஒரு பக்கத்தில்
நீண்ட மேசையின் மீது இசைக்கலைஞர்கள் அமர்ந்து இருப்பர். மூன்று பக்கங்களிலும்
பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். இரவு பத்து மணி அளவில் தொடங்கும் தெருக்கூத்து
விடியவிடிய நடைபெறும். ஆண்களே பெண் வேடமேற்று நடிப்பர். பாரதக் கதைகள் இராமாயணக்
கதைகள், அரிச்சந்திரன் கதை, வள்ளி - முருகன் கதை புராண, இதிகாச புராணக் கதைகள்
இக்கலைஞர்களால் நடிக்கப்படும். ஆடலும் பாடலும் கூத்தின் முக்கிய அம்சங்கள்.
|
கனியன் கூத்து :
இது கணியான் என்னும் சாதியினர் ஆடும்
கூத்து. நெல்லை, குமரி மாவட்டங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் நிகழும்
இக்கூத்தும் கதை தழுவியதே. சுடலை மாடன், பன்றி மாடன், தளவாய்
மாடன், கறுப்புசாமி
எனப் பல்வேறு கிராமத் தெய்வங்களின் கதைகள் குறிப்பிடத்தக்கவை. சீதா
கல்யாணம், முத்துப்பட்டன் கதை போன்ற பிற கதைகளும் இவர்களால்
நிகழ்த்தப்படுகின்றன.
|
4. கதை கூறல் : பல்வேறு இசைக் கருவிகளின் துணையுடன் பாடலாகவும்
வசனமாகவும் மக்கள் முன் கதை கூறும் பழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது,
வில்லுப்பாட்டு, உடுக்கை நிகழ்ச்சி, இலாவணி போன்றன இவை.
|
5. போர்க் கலைகள் : ஒரு காலத்தில் போரிடுவதற்கு எனப்
பயன்படுத்தப்பட்டு வந்த போர்ப் பயிற்சிகள் இன்றைய நிலையில் பொழுதுபோக்கிற்கு என
மக்கள் முன் நிகழ்த்தப்படும் போர்க் கலைகளாக (சிலம்பம், கத்திச்சண்டை) மாறியுள்ளன.
|
6. வித்தைகள் : இன்றைய நிலையில் மக்களைக் கவருவதற்காக
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றிலும் வித்தைகள் இடம்பெறுகின்றன. ஆயினும்
கண்கட்டு வித்தை, சாட்டை அடி, தொம்பாட்டம் முதலியவை வித்தைகள் காட்டுவதையே
நோக்கமாகக் கொண்ட கலைகள், பாம்பினை வைத்து வேடிக்கை காட்டுவதும் குரங்கினைப்
பயிற்றுவித்து ஆடச் செய்வதையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.
|
மேற்கண்ட இந்த வகைப்பாடு நெகிழ்ச்சியானது. ஒரு
பிரிவில்
அடக்கப்படும் கலை சில நேரங்களில் வேறு பிரிவிற்கும் பொருத்தமாக
இருக்கும். சான்றாகச் சேவையாட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தருமபுரி
மாவட்டம் எத்திலாமலைக்
காட்டூர் எனும் ஊரில் சேவையாட்டம் கருவி இசைக்கேற்ப ஆடும் கருவி இசை
ஆட்டமாகவே
நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில்
நடைபெறும்
சேவையாட்டத்தில் பாடல்கள் முதன்மை பெறுகின்றன.
|
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்படும் சூழல்
|
ஒவ்வொரு நிகழ்த்து கலையும் ஏதோ ஒரு சூழல் காரணமாகவே
நிகழ்த்தப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் தமிழக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்
நிகழ்த்தப்படும் சூழல்களைப் பற்றிக் கீழே காணலாம்.
|
1. கோயிற் சடங்கின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்படுகின்றன.
|
2. கோவில் விழாக்களில் நடத்தப்படுகின்றன.
|
3. வாழ்வுச் சடங்குகளின் போது (திருமணம், பூப்பு, காது குத்தல்)
நிகழ்த்தப்படுகின்றன.
|
4. சாவுச் சடங்குகளின்போது (இறந்த நாள் 16ஆம் நாள் சடங்கு,
ஆண்டு நிறைவு நாள்)நிகழ்த்தப்படுகின்றன.
|
5. அரசியல் விழாக்களின் (தலைவர்கள் பிறந்த நாள், வரவேற்பு,
ஊர்வலங்கள், கூட்டங்கள்) போது நிகழ்த்தப்படுகின்றன.
|
6. அரசு விழாக்களின்(குடியரசு தினம், சுதந்திர தினம், அயல்
நாடுகளில் இந்திய விழாக்கள், அயல் மாநிலங்களில் கலாச்சார விழாக்கள்) போது
நிகழ்த்தப்படுகின்றன.
|
7. பிரச்சார நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றன.
|
8. அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்கள், ஆண்டு விழாக்கள்,
பொங்கல் விழாக்கள், பெற்றோர் தின விழாக்கள், காவல்துறை விழாக்கள் ஆகியனவற்றின்போது
நிகழ்த்தப்படுகின்றன.
|
9. இரத்தல் அல்லது யாசித்தலுக்காக
நிகழ்த்தப்படுகின்றன(நாட்டுப்புறக் கலைகள் ஆறு. இராமநாதன், 2001).
|
7.2.2
நாட்டுப்புற நிகழ்த்தாக் கலைகள்
|
கலையழகுடன் வீட்டுப் பயன்பொருட்களை உருவாக்கும் கலைகளை
நிகழ்த்தாக் கலைகள் என்பர். இவை அனைத்திலும் நாட்டுப்புறக் கலைஞனின் கைத்திறன்
முதன்மையானதாகத் திகழ்வதால் இவற்றைக் ‘கைவினைக் கலைகள்’ என்றும் குறிப்பிடுவர்.
‘‘நாட்டார் கைவினைக் கலைகள் என்பவை மரபுவழிக் கலைகளே. மரபின் ஆற்றலை ஒருவன் கைவினைக்
கலைகளில் தெளிவாகக் காணலாம். அண்மைக் காலம் வரை கைவினைக் கலைகள் குறித்த
உத்திகளும், தினுசுகளும்(Designs) பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்களால் வழிவழியாகச் செய்யப்பட்டு வந்தன’’ எனத் தே. லூர்து(1997, ப. 358)
கூறுவது கவனத்திற்குரியது.
|
ஒரு சமுதாயத்தின் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றோடு அந்நாட்டின்
கைவினைக் கலைகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கைவினைப் பொருட்கள் வாழ்க்கைக்குப்
பயன்படும் வகையிலும் கலைத்தன்மையுடனும் உருவாக்கப்படுகின்றன. இவை பரம்பரை
பரம்பரையாகக் கற்றுத் தரப்படுகின்றன.
|
நாட்டுப்புற நிகழ்த்தாக் கலையைப் பொருட் கலை, அழகுக் கலை / ஒப்பனைக் கலை என இரண்டாக வகைப்படுத்தலாம்.
|
1. பொருட் கலை
|
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை உருவாக்குவதும்
அவற்றை
அழகுபடுத்துவதும் இக்கலையில் அடங்கும். மரவேலை செய்யும்
தச்சர்களும், குயவர்களும், பெண்களும் இக்கலை வல்லுநர்களாகத்
திகழ்கின்றனர்.
|
விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப்
பொருட்கள், வீட்டுத் தூண்கள், வாயில்கள், உத்தரங்கள் போன்ற மரத்தினாலான
பொருட்கள், மண்பாண்டப்
பொருட்கள் போன்றன நாட்டுப்புறக் கைவினைப் பொருள்களில் சிறப்பிடம்
பெறுவனவாகும்.
அவற்றில் சிலவற்றை இனிக் காணலாம்.
|
கூடை, முறம் கட்டுதல் : வீட்டிற்குத் தேவையான கூடை
முறங்களைக் கட்டும்போதுகூட நாட்டுப்புற மக்கள் கலையெழிலுடன் செய்கின்றனர். பிரம்பு,
நாணல், பனையோலை, மூங்கில் கொம்பு, பட்டை, ஈச்ச மிளாறு, புளிய மிளாறு போன்றவற்றால்
கூடை முடைகின்றனர். கூடை, பெட்டி, பாய், முறம் போன்றவை இக்கலைத் தொழிலில் அடங்கும்.
இக்கலையில் பல வண்ணங்களின் சேர்க்கையும் பல வடிவங்களின் அமைப்பும் நெஞ்சை ஈர்க்கும்
வகையில் பேரெழிலுடன் விளங்கும்.
|
மண்பாண்டக் கலை :
தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும்
சிறப்புப் பெற்றது. மண்பாண்டம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட கைவினைஞர்கள்
கலையழகு
மிளிரும் வண்ணம் பொருட்களைப் பண்டைய திறத்துடன் இன்றைய கண்ணோட்டத்தையும்
கலந்து
பல்வேறு மாற்றங்களைச் செய்து காண்போரைக் கவரும் வண்ணம்
தருகின்றனர். மண்ணால்
செய்யப்படும் பொருட்கள் தொடக்க காலங்களில் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம்
தந்தன. தற்போது காலச் சூழலில் இவற்றின் பயன்பாடு குறைந்தபோது அதை
ஈடுகட்டும் வண்ணம்
கலைத்திறனை ஊட்டி அழகுணர்ச்சியை ஏற்றிக் கலைப்பொருட்களாக அவற்றை
மாற்றிவிடுகின்றனர். ஒரு காலத்தில் அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்திய
புழங்கு
பொருட்கள் இன்று ஐந்து நட்சத்திர ஆடம்பரத் தங்கும் விடுதிகளில்
கலைப்பொருட்களாக,
காட்சிப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன.
|
காகிதப் பொம்மைகள் : களிமண்ணால் பொம்மைகள் செய்வதைப் போலக்
காகிதக் கூழ் கொண்டு பொம்மைகள் செய்யப்படுகின்றன. இவை இன்றைய நாகரிகப்
போக்கிற்கேற்பக் கலை வளர்ச்சி பெற்றுள்ளன. உலோகப் பொம்மைகளுக்கு நிகராகவும் காகிதப்
பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
|
மரப்பொம்மைகள் : குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான
அழகான பொம்மைகள் மரத்தினால் செய்யப்படுகின்றன. இத்தொழில் நெடுங்காலமாக இருந்து
வருகின்றது. தேரின் சக்கரங்களிலும் வீட்டுக் கதவுகளிலும் அழகான மரப்பொம்மைகள்
செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சில அரண்மனைகளிலும் செட்டிநாட்டு மாளிகைகளிலும்
கூட மரவேலைப்பாடுகள் அதிகம். கோயில் வாகனங்களும் மரத்தினால் செய்யப்படுபவையே.
|
உலோகச் சிற்ப வேலைப்பாடு : தமிழகத்தின் உலோகச் சிற்ப
வேலைப்பாடு உலகளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று ஆகும். உலோகங்களில்
தெய்வச் சிலைகளும் பாவை விளக்குகளும் செய்யப்படுகின்றன. இவை தவிர வெண்கல வார்ப்புக்
கலையும் தமிழகத்தில் சிறப்புற்று விளங்குகின்றது.
|
தஞ்சாவூர்த்தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல் : தஞ்சை
என்றாலே பல கலைகளின் பிறப்பிடம் எனக் கூறலாம். தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப்
பகுதிகளில் நெல்மணி, ஏலக்காய் போன்றனவற்றைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள்
செய்கின்றனர். இவை நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டவை. நம் நாட்டிற்கு வரும்
வெளிநாட்டவருக்கு நினைவுப் பரிசாகத் தஞ்சாவூர்த் தட்டு இன்றளவும் வழங்கப்பட்டு
வருகின்றது. தஞ்சாவூர்ப் பொம்மை உலகளவில் புகழ் பெற்றது ஆகும்.
|
மேற்கண்டவை நாட்டுப்புறப் பொருட் கலைக்கான ஒரு சில
சான்றுகளே. இவை தவிரத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அந்தந்த இடங்களில் கிடைக்கும்
இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன.
|
2. அழகுக் கலை / ஒப்பனைக் கலை
|
நாட்டுப்புற மக்கள் தம் வாழ்வில் பயன்படுத்தும்
பொருள்களையும் தங்களையும் அழகுபடுத்தும் நோக்கில் இக்கலை அமைந்துள்ளது. இவற்றில்
அழகுணர்ச்சி மட்டுமே முதன்மையானதாகக் கருதப்படும். நாட்டுப்புற ஓவியங்கள்,
கோலமிடுதல், பச்சை குத்துதல், மனித ஒப்பனை, தெய்வங்களை ஒப்பனை செய்தல் போன்றவற்றை
இவற்றிற்குச் சான்றாகக் கூறலாம்.
|
நாட்டுப்புற ஓவியங்கள் :
கிராமங்களில் அறுவடை இல்லாத
காலங்களில் அங்கு வாழும் மக்கள் கலைகளில் ஈடுபடுவர். அக்கலைகளில் ஒன்று
ஓவியக் கலை. துணிகளிலும், மரங்களிலும், காகிதங்களிலும் ஓவியங்களைத்
தீட்டுவர். சுவரோவியங்கள், அருளோவியங்கள்(கடவுள்களின்
ஓவியங்கள்), பாண்ட ஓவியங்கள், தோற் கூத்து ஓவியங்கள்
போன்றவை இக்கலையின் பல வகைகளாகும்.
|
தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் காலத்தில் காகிதங்களில் பல
வண்ண, ஓவியங்களை உருவாக்கினர். இக்கலையின் வளர்ந்த நிலையே மரச்சிற்பம், கற்சிற்பம்
எனலாம்.
|
கோலமிடுதல் : கோலம் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்.
இந்தியா முழுவதும் கோலமிடும் வழக்கத்தினைக் காணலாம். நாள்தோறும் வீட்டு வாயில்களில்
பெண்கள் கோலமிடுவதைக் காணலாம். வீட்டின் உட்பகுதிகளிலும் கோயில்களிலும் கோலங்கள்
இடப்படுகின்றன. அரிசி மா, கல் மா, மண், வண்ணப்பொடிகள் ஆகியவை கோலப்பொடியாகப்
பயன்படுகின்றன. வட்டம், சதுரம், பூக்கள், இயற்கைத் தோற்றங்கள் போன்ற பல வடிவங்களில்
கோலங்கள் அமைவதுண்டு.
|
பச்சை குத்துதல் : பச்சை வண்ணத்தில் மக்கள் தம் உடம்பில்
பல வடிவங்களை வரைந்து கொள்வதனைப் பச்சை குத்துதல் என்பர். மார்பு, மேற்கை,
முன்னங்கை, கால் போன்ற உடற்பகுதிகளில் பச்சை குத்திக்கொள்வர்.
|
மஞ்சள் பொடி, அகத்திக்கீரை ஆகியவற்றை அரைத்துத்
துணியில்
வைத்துத் திரியாக்கி எரித்துக் கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து
மையாக்கிக் கொள்வர். மைக்குள் ஊசியை அழுத்தி எடுத்து ஊசியால் கோடுகளை
வரைவர். பின்னர்க் குளிர்ந்த நீரில் நன்கு கழுவி மை தடவுவார்கள், தெய்வ
வடிவங்கள், தேள்,
பாம்பு போன்ற உருவங்களையும் பெயர்களையும் பச்சை குத்திக்கொள்வது
பெருவழக்கம்.
|
ஆறு. இராமநாதன்(1997) ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்’
என்னும்
நூலில் இரா. பவுன்துரையுடன் இணைந்து ‘கிராமப்புற ஓவியங்கள்’ என்னும்
தலைப்பில்
கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். இதில் நாட்டுப்புற ஓவியங்களை
அழகோவியங்கள், சடங்கோவியங்கள் என இரண்டாகப் பகுத்து
விளக்கியுள்ளார். அழகுப்படுத்துவதை மட்டுமே
நோக்கமாகக் கொண்டவை. அழகோவியங்கள் விழாச்சடங்கோடு தொடர்புடைய மந்திர
ஆற்றல் உள்ளதாக
நம்பப்படும் ஓவியங்கள் சடங்கோவியங்கள்.
|
நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பை விளக்கித் ‘தாமரை’ என்னும்
இதழ் தலையங்கம் எழுதியுள்ளதைச் சு.சண்முகசுந்தரம் தமது ‘நாட்டுப்புற இயல்’ என்னும்
நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். ‘‘இந்தப் பண்டைய பெருங்கலைகள் தமிழ்ப் பெருங்குடி
மக்களின் வியப்பூட்டும் திறத்தினையும் வெளிப்படுத்தியுள்ளன. அறத்தையும்,
வீரத்தையும், அன்பையும், பண்பையும், நாட்டுப்புறப் பற்றையும், முறையான இல்லற
வாழ்வின் மாண்பினையும் தேனோடு குழைத்துத் தரும் அருமருந்தினைப் போல் ஊட்டியுள்ளன.
ஆயிரம் ஏடுகளும் பல நூறு மேடைகளும் செய்ய முடியாத சாதனையை இந்தப் பழம்பெருங் கலைகள்
கோடானுகோடி கிராம மக்களிடையே ஆற்றியுள்ளன’’.
|
|
No comments:
Post a Comment