Sunday, August 9, 2015

மிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றி உறவாடிய கலைகளில் முதன்மையான கலை கிராமியக்கலை. கிராமங்களில் வசிக்கும் மக்களின் இன்ப துன்பங்களில் பின்னிப் பிணைந்து வளர்ந்தவைகளே இக்கிராமியக்கலைகள். இதனை நாட்டுப்புறக் கலைகள் என்றும் அழைப்பர். தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரையில் கிராம மக்களின் வாழ்வோடு இணைந்து வளர்ந்தவை கிராமியப் பாடல்களாகும். பழந்தமிழகத்தில் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களே மிகுதியாக இருந்தன. பண்டைக் கால கிராமங்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் நகரங்களுக்கு ஈடாகவே விளங்கின. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தனவைகளே கிராமியக் கலைகள். அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.
கோலாட்டம்
முக்கிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம். குச்சிகளைக் (கோல்) கையில் பிடித்துக் கொண்டு பாடலோடு ஆடுவதே கோலாட்டம். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் இன்று சில இடங்களில் இருபாலரும் சேர்ந்து ஆடும் ஆட்டமாகவும் மாறியுள்ளது. கோலாட்டத்திற்கு என்று பிரத்யேகப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல் முதலில் மெதுவாகத் தொடங்கும். பின்னர் போகப் போக வேகம் எடுக்கும். கோலாட்டம் ஆடுவதற்குப் பயிற்சி பெரிதும் தேவைப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களில் கோலாட்டம் ஆடுவது தமிழகத்தில் பல பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான ஆட்டங்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன. பள்ளி, கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளிலும் கோலாட்டம் நடத்துவார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், பொதிக மலையில் காணிக்காரர்களான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குமரிமாவட்டம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதி மலைகளிலும் காணிக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு வகையான கோலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். காணிக்காரர்கள் ஓணம் பண்டிகை, கார்த்திகை கொடுதி, (வணங்கப்படும் குலதெய்வங்களுக்கு விழா எடுப்பது) திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் கோலாட்டத்தை நடத்துகின்றார்கள். மூத்த கலைஞர்களிடம் இருந்து இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் கோலாட்டத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
பின்னல் கோலாட்டம்
கோலாட்டத்தின் இன்னொரு வகையான ஆட்டம் பின்னலாட்டம். இதனைக் கயிற்றுப்பின்னலாட்டம் என்றும் அழைப்பர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்தக் கலை உள்ளது. சௌராஷ்டிர மொழியில் இதனைப் பாண்டியாக ரக நடனம் என்பர். ராஜஸ்தானி மொழியில் கர்பா நடனம் என்றும், ஆந்திராவில் ஜடை கோலாட்டம் என்றும் அழைக்கிறார்கள்.
பின்னல் கோலாட்டத்தைப் பெண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். கோவில் விழா, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்களில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது சாதாரண கோலாட்டத்தில் இருந்து மாறுபட்டது. நன்றாகப் பயிற்சி பெற்ற பெண்களால் மட்டுமே ஆட முடியும்.
கோவில்மண்டபம் போன்று மேற்கூரையுள்ள அரங்கங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தமுடியும். கூரையில் சேர்த்துக்கட்டப்பட்ட பல வண்ணத்துணிகளை ஒருகையால் பிடித்துக் கொண்டு கோலாட்டம் போலாடுவது தான் பின்னல் கோலாட்டமாகும்.
இவ்வாறு ஆடிக்கொண்டே துணியில் பின்னல்போடுவதும், பின்னரவற்றைச் சிக்கலின்றி அவிழ்ப்பதும் இந்தஆட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். ஒருவர் தவறாக ஆடினாலும் பின்னலில் ஏற்பட்டச் சிக்கல்களை அவிழ்க்கமுடியாது. ஒவ்வொரு திசைக்கும் மூன்று பெண்கள் வீதம் எதிரெதிர்திசையில் நின்று கொண்டு, நளினத்துடன் இந்த நடனத்தை ஆடுவது பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும்.
சிலம்பாட்டம்
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சிலம்பாட்டக்கலை பெருமளவு நட்ததப்படுகிறது.
சினிமா படங்களில் சண்டைக்காட்சிகளில் சிலம்பாட்டக் கலையைக் காட்ட தொடங்கிய பின்பு, தமிழகத்தின் இளைஞர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ளும் கலையாக மாறி விட்டது.
சிலம்பம் கற்ற ஆசான் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 7வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் இக்கலையைப் பயில வேண்டும் என்று சிலம்பப்பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வயதில்தான் சிலம்பம் பயில ஏற்ற உடல் வாகும், உடல் அசைவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நல்ல நினைவாற்றலும் தேவை.கம்புகளின் வீச்சையும், அசைவையும் கவனிக்கும் வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே நினைவாற்றல் உள்ளவர்கள் சிறந்த வீர்ர்களாக உருவாக முடியும். சிலம்பம் பயிலும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பயிற்சி செய்கின்றனர். பயிற்சி முடிந்ததும் உளுந்து,பாசிப்பயறு கலந்த கூழைக் குடிக்கின்றனர். தென்னந்தோப்பு, ஆற்றங்கரை யோரம் மற்றும் மேடான பகுதிகளில் சிலம்ப பயிற்சி நடைபெறும்.
சிலம்ப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு அடையாளமாக முதலில் செண்டை மேளம் அடிப்பார்கள். பின்னர் கற்றுக்கொடுத்த ஆசானை வணங்கும் வகையில், கலைஞர்கள் சிலம்ப ஆட்டத்தில் வணக்க வித்தையை அடிப்பார்கள். சிலம்பத்தில் அனைத்துவகை ஆட்டமுறைகளையும் ‘சுவடு’ அல்லது ‘செவிடு’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுகிறார்கள்.
குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடப்படும் சிலம்ப ஆட்டத்தைத் ‘தெக்கசெவிடு’என்றும் அழைக்கிறார்கள். சுவடு வகை வித்தைகளைப் பொன்னுசுவடு, தேங்காய்சுவடு, ஒத்தை சுவடு, குதிரை சுவடு, உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
சிலம்பம் மட்டுமின்றி ஆயுதங்கள், கயிறு, தீப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வீர விளையாட்டுக்களையும் சிலம்பக்கலைஞர்கள் ஆடி,பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்கள்.
சிலம்பத்தில் கடாரி, படவாள், சடவாள், கண்டக்கோடரி, சுருட்டுவாள்,ரெட்டு ஆகியவற்றையும் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. தற்போது சிலம்பக்கலை மக்களிடம் பிரபலமாக உள்ளது. சிலம்பம் படித்தால் வர்மக் கலையையும் அறிய முடியும் என்பதால், சிலம்ப பயிற்சியில் சேர்வதற்கு படித்தவர்களும் கூட ஆர்வமாக முன்வருகிறார்கள். சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.

No comments:

Post a Comment