Sunday, August 9, 2015

காலங்கள் மாற மாற இசையின் வடிவங்களும் பல பரிமாற்றங்களை கொண்டு வளர்ந்து வருகிறது. கர்நாடக இசையில் இருந்து ராப், பாப், ஜாஸ் என தற்போது இளைய தலைமுறையினருக்கு ஏற்ப இசைகள் , பாடல்கள் என புதிதாக வளர்ந்து வருகிறது. நாதஸ்வரம், தவில், பறை, போன்ற இசை கருவிகள் மாறி பியானோ, ஹிதார் என உருவங்களில் கூட மாற்றம் அடைந்துள்ளது. புல்லாங்குழல், பறை, கர்நாடக இசை  என அனைத்திலும் சிறந்து விளங்கி எண்ணற்ற இசை அமைப்பாளர்கள், இசை வல்லுனர்கள் தமிழகத்தை தான் தாயாகமாக கொண்டு அதன் சிறப்பையும், மகத்துவத்தையும் பல நாடுகளுக்குப் பரப்பினர். 

அதிலும் நாட்டுப்புற கலைகளில் பிரபலமானது நம் ஊர்தான். கும்மி பாட்டு, ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம் , நாட்டுப்புற நடனம்;   அனைத்திலும் சிறந்து விளங்கியது தமிழகம்தான். நாட்டுப்புற கலைகளில் தேவையானது வாய் வழிப்பாட்டு மற்றும் அதற்கேற்ப பின்னணி இசை போன்றவை கலாச்சார வடிவங்களை உண்மையில் பிரதிபலிப்பதாகும். இந்த கலைக்களுக்கென்று எந்த ஒரு பயிற்சியும் தேவையில்லை என்பதுடன் நம் அன்றாட வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களை அந்த இசைகள் எதிரொலிப்பதாகும். கதை வடிவில் பாட்டுக்கள் பாடுவது அந்த காலத்து கிராமப்புற கலைகளின்  மற்றொரு சிறப்பாகும். இவ்வாறு இசையின் முலம் கதைகளை பாடும் கலைகளில் ஒன்றானது வில்லுப்பாட்டு. 

மற்ற கிராமிய பாடல்களுக்கும் வில்லுப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் நாட்டுப்புற பாடல்களுக்கான அனைத்து அமசங்களும் நிரம்பியுள்ளதாகும். இதற்;கு பயன்படுத்தும் கருவிகள், பாடும் முறை என அனைத்தும் மக்களை ஈர்க்கும் விதமாகவே இருந்தது, ஆனால் தற்போது இந்த கலைகள் அழிந்துக் கொண்டேப் போகிறது. ஆண்களே முன்னிறுத்திக் கொண்டு செல்ல வேண்டிய ஒரு கலையை நயினாரகரம் என்னும் கிராமத்தில் சுப்புலட்சுமி என்னும் பெண்மணி தமிழ் நாட்டில்   மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் வில்லிசைக் கலையைப்   பரப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் நயினாரகரம் என்னும் ஊராட்சியில் வாழ்ந்து வருபவரான இவர் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வில்லுப்பாட்டை பாடியுள்ளார்.

                                            வில்லிசை பாடுவது என்பது பாடல் மட்டுமின்றி ஒரு கதையுடன் இசையை சேர்த்து பாடுவதாகும். இவரின் இந்த திறமை தந்தையார் சங்கரளிங்கத்திடமே வந்துள்ளது .இவர் பெருமாள் தேவர் எனும் வில்லிசை கலைஞர்ரிடம் பிற்ப்பாட்டு பாடுபவராக இருந்துள்ளார். இதுவே சுப்புலட்சுமி வில்லிசை கலையில் ஈடுபட ஒரு வித்தாக இருந்துள்ளது. பின்னர் பெருமாள் தேவரிடமே மாணவியாக சேர்ந்து நான்கு வருடம் இந்த இசையை கற்றுள்ளார். 

                                            பின்னர் இந்த கலையை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று அரங்கேற்றம் செய்தார். அத்துடன் பிறமாநிலங்களான மும்பை வரை வில்லிசை கலையை அரங்கேற்றியுள்ளார்.  சென்னை பொதிகை தொலைக்காட்சியிலும், திருநெல்வேலி வானொலி நிலையத்திலும் பல முறை வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். விவசாயத்தை தலைப்பாக கொண்டு வில்லுப்பாட்டு முலம் பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் . பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை  முன்னின்று நடத்தியுள்ளார் 

                                                      நயினரகரம் அருகே உள்ள சிற்றுரான பால மார்த்தாண்டப்புறத்தில்        இவர் பிறந்துள்ளார். தனது பதிமூன்றாம்    வயதில் ஆரம்பித்த வில்லிசை பயிற்சியை பதினேழாம் வயதில் முடித்து கொண்டு தனது முதல் அரங்கேற்றத்தை பிறந்த ஊரில் உள்ள முப்படாதியம்மன் கோயிலில் நிகழ்த்தியுள்ளார். தனது 28ம் வயதில் திருமணம் செய்து கொண்ட இவர் நாளடைவில் தனது கணவரையும் தன்னுடன் இணைத்து கொண்டு தான் முன்னின்று நடத்தும் நிகழ்ச்சிகளில் பிற்பாட்டு பாடுபவராக மாற்றியுள்ளார்
                                                    பொதுவாக அம்மன், அய்யனார் போன்ற கடவுள்களின் கதைகளும், புராணக் கதைகளான ராமாயணம், மகாபாரதக் கதைகளையும் மற்றும் விவசாயத்தை சார்ந்த கதைகளும் வில்லிசை மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.  வில்லிசை அரங்கேற்றம் செய்வதற்கு முன் அதில் உள்ள 9 ராகம், 11 தளங்கள் மட்டும் அல்லாது கதைகளையும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெருமைக்குரிய சுப்புலட்சுமி      5ம் வகுப்பு வரை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5ம் வகுப்பு வரை படித்திருந்தாலும், 'வில்லிசை அனாதி' என அழைக்கப்படுகிறார். வில்லுப்பாட்டு என்பது வில்லிசை அனாதி மட்டும் இல்லாமல் பிற்பாட்டுப்படிப்பவரின் தேவையும் இதற்கு அவசியம். ஒரு முழுமையான வில்லிசை என்பது குடம், உடுக்கை, கட்டை மற்றும் கைத்தாளம் போன்ற வடிவங்கள் இணைத்தால் மட்டுமே நல்ல இசை பிறக்கும்.     வில்லுப்பாட்டு மூலம் 25 தங்கப் பதக்கங்களும், மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விருதுகளும் போன்ற பல பரிசுகளைப் பெற்றுள்ளார். தற்போது, சுப்புலட்சுமி வில்லுப்பாட்டு பாடுவத்தில்லை. மேலும், பல நுற்றாண்டுகளாக செழிப்பாக இருந்த இவ்வகையான கிராமியக் கலைகள் தற்போது நயினாரகரம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் குறைந்து வருவது    வேதனைக்குரிய ஒன்றாகும்.
மிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றி உறவாடிய கலைகளில் முதன்மையான கலை கிராமியக்கலை. கிராமங்களில் வசிக்கும் மக்களின் இன்ப துன்பங்களில் பின்னிப் பிணைந்து வளர்ந்தவைகளே இக்கிராமியக்கலைகள். இதனை நாட்டுப்புறக் கலைகள் என்றும் அழைப்பர். தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரையில் கிராம மக்களின் வாழ்வோடு இணைந்து வளர்ந்தவை கிராமியப் பாடல்களாகும். பழந்தமிழகத்தில் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களே மிகுதியாக இருந்தன. பண்டைக் கால கிராமங்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் நகரங்களுக்கு ஈடாகவே விளங்கின. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தனவைகளே கிராமியக் கலைகள். அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.
கோலாட்டம்
முக்கிய கலைகளில் ஒன்றான கோலாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம். குச்சிகளைக் (கோல்) கையில் பிடித்துக் கொண்டு பாடலோடு ஆடுவதே கோலாட்டம். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் இன்று சில இடங்களில் இருபாலரும் சேர்ந்து ஆடும் ஆட்டமாகவும் மாறியுள்ளது. கோலாட்டத்திற்கு என்று பிரத்யேகப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல் முதலில் மெதுவாகத் தொடங்கும். பின்னர் போகப் போக வேகம் எடுக்கும். கோலாட்டம் ஆடுவதற்குப் பயிற்சி பெரிதும் தேவைப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களில் கோலாட்டம் ஆடுவது தமிழகத்தில் பல பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான ஆட்டங்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன. பள்ளி, கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளிலும் கோலாட்டம் நடத்துவார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், பொதிக மலையில் காணிக்காரர்களான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குமரிமாவட்டம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதி மலைகளிலும் காணிக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு வகையான கோலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். காணிக்காரர்கள் ஓணம் பண்டிகை, கார்த்திகை கொடுதி, (வணங்கப்படும் குலதெய்வங்களுக்கு விழா எடுப்பது) திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளில் கோலாட்டத்தை நடத்துகின்றார்கள். மூத்த கலைஞர்களிடம் இருந்து இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் கோலாட்டத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
பின்னல் கோலாட்டம்
கோலாட்டத்தின் இன்னொரு வகையான ஆட்டம் பின்னலாட்டம். இதனைக் கயிற்றுப்பின்னலாட்டம் என்றும் அழைப்பர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்தக் கலை உள்ளது. சௌராஷ்டிர மொழியில் இதனைப் பாண்டியாக ரக நடனம் என்பர். ராஜஸ்தானி மொழியில் கர்பா நடனம் என்றும், ஆந்திராவில் ஜடை கோலாட்டம் என்றும் அழைக்கிறார்கள்.
பின்னல் கோலாட்டத்தைப் பெண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். கோவில் விழா, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்களில் இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இது சாதாரண கோலாட்டத்தில் இருந்து மாறுபட்டது. நன்றாகப் பயிற்சி பெற்ற பெண்களால் மட்டுமே ஆட முடியும்.
கோவில்மண்டபம் போன்று மேற்கூரையுள்ள அரங்கங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தமுடியும். கூரையில் சேர்த்துக்கட்டப்பட்ட பல வண்ணத்துணிகளை ஒருகையால் பிடித்துக் கொண்டு கோலாட்டம் போலாடுவது தான் பின்னல் கோலாட்டமாகும்.
இவ்வாறு ஆடிக்கொண்டே துணியில் பின்னல்போடுவதும், பின்னரவற்றைச் சிக்கலின்றி அவிழ்ப்பதும் இந்தஆட்டத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். ஒருவர் தவறாக ஆடினாலும் பின்னலில் ஏற்பட்டச் சிக்கல்களை அவிழ்க்கமுடியாது. ஒவ்வொரு திசைக்கும் மூன்று பெண்கள் வீதம் எதிரெதிர்திசையில் நின்று கொண்டு, நளினத்துடன் இந்த நடனத்தை ஆடுவது பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும்.
சிலம்பாட்டம்
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் குறித்த தகவல்களை இங்குக் காண்போம். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சிலம்பாட்டக்கலை பெருமளவு நட்ததப்படுகிறது.
சினிமா படங்களில் சண்டைக்காட்சிகளில் சிலம்பாட்டக் கலையைக் காட்ட தொடங்கிய பின்பு, தமிழகத்தின் இளைஞர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ளும் கலையாக மாறி விட்டது.
சிலம்பம் கற்ற ஆசான் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். 7வயது முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் இக்கலையைப் பயில வேண்டும் என்று சிலம்பப்பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த வயதில்தான் சிலம்பம் பயில ஏற்ற உடல் வாகும், உடல் அசைவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு நல்ல நினைவாற்றலும் தேவை.கம்புகளின் வீச்சையும், அசைவையும் கவனிக்கும் வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே நினைவாற்றல் உள்ளவர்கள் சிறந்த வீர்ர்களாக உருவாக முடியும். சிலம்பம் பயிலும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பயிற்சி செய்கின்றனர். பயிற்சி முடிந்ததும் உளுந்து,பாசிப்பயறு கலந்த கூழைக் குடிக்கின்றனர். தென்னந்தோப்பு, ஆற்றங்கரை யோரம் மற்றும் மேடான பகுதிகளில் சிலம்ப பயிற்சி நடைபெறும்.
சிலம்ப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு அடையாளமாக முதலில் செண்டை மேளம் அடிப்பார்கள். பின்னர் கற்றுக்கொடுத்த ஆசானை வணங்கும் வகையில், கலைஞர்கள் சிலம்ப ஆட்டத்தில் வணக்க வித்தையை அடிப்பார்கள். சிலம்பத்தில் அனைத்துவகை ஆட்டமுறைகளையும் ‘சுவடு’ அல்லது ‘செவிடு’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுகிறார்கள்.
குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடப்படும் சிலம்ப ஆட்டத்தைத் ‘தெக்கசெவிடு’என்றும் அழைக்கிறார்கள். சுவடு வகை வித்தைகளைப் பொன்னுசுவடு, தேங்காய்சுவடு, ஒத்தை சுவடு, குதிரை சுவடு, உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
சிலம்பம் மட்டுமின்றி ஆயுதங்கள், கயிறு, தீப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வீர விளையாட்டுக்களையும் சிலம்பக்கலைஞர்கள் ஆடி,பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்கள்.
சிலம்பத்தில் கடாரி, படவாள், சடவாள், கண்டக்கோடரி, சுருட்டுவாள்,ரெட்டு ஆகியவற்றையும் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. தற்போது சிலம்பக்கலை மக்களிடம் பிரபலமாக உள்ளது. சிலம்பம் படித்தால் வர்மக் கலையையும் அறிய முடியும் என்பதால், சிலம்ப பயிற்சியில் சேர்வதற்கு படித்தவர்களும் கூட ஆர்வமாக முன்வருகிறார்கள். சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.

தமிழக நாட்டுப்புற கலைகள் - உமயபார்வதி


தமிழக நாட்டுப்புற கலைகள் - முனைவர் எஸ். உமயபார்வதி
(நன்றி: பரஞ்சோதி)

அறிமுகம்:-

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.

அதே சமயம் நாம் நம்முடைய பாரம் பரியத்தன்மைகளையும், கலை மரபுகளையும் ஒதுக்கிட வேண்டியதில்லை. நம்முடைய பாரம்பரியத் தன்மைகளை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கடமையும், பொறுப்பும் அவசியமும் நமக்கு இருக்கிறது. தொழில் நுட்பத்தின், வளர்ச்சி அடைந்த நாடுகளும், அதிநவீன நாகரிகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடுகளும்கூட, தங்களுடைய பாரம்பரியக் கலைகளைப் புறக்கணித்துவிடவில்லை தங்களுடைய எல்லா வளர்ச்சிக்கும் அதனையே ஆதராமாகக் கொண்டுள்ளன.

நமது இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன. இவை தனக்கே உரித்தான தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை.

வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கலவையாக சில கலைகளை கிராமங்கள் நமக்கு அளித்துள்ளன. அவை பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பனவாகும். ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றத்திற்கு உரம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதனை அறியமுடிகிறது.

இந்திய நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவை. இவைகளை நிகழ்த்துக் கலைகள் (Preforming Arts) நிகழ்த்தாத கலைகள் (Non-Performing Arts) பொருட்கலை (material Arts) என நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக தமிழக நாட்டுப்புற கலைகள்:-

1. ஒயிலாட்டம் 2. ஆலியாட்டம் 3. கோலாட்டம் 4. கரகாட்டம் 5. காவடி ஆட்டம் 6. கும்மி 7. வில்லுப்பாட்டு 8. தெருக் கூத்து 9. பாவைக் கூத்து (பொம்மலாட்டம்) 10. கனியான் ஆட்டம், 11. வர்மம் 12. சிலம்பாட்டம். 13. களரி 14. தேவராட்டம் 15. சக்கையாட்டம் 16. பொய்க்கால் குதிரை ஆட்டம் 17. மயிலாட்டம் 18. உறியடி விளையாட்டு (கண்ணன் விளையாட்டு) 19. தப்பாட்டம் 20. உக்கடிப்பாட்டு 21. இலாவணி 22. கைச்சிலம்பாட்டம் 23. குறவன் குறத்தியாட்டம் 24. துடும்பாட்டம் 25. புலி ஆட்டம் 26. பொம்மைக் கலைகள் 27. மண்பாண்டக் கலை 28. கோலக் கலை

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமியக் கலைகள்:-

ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.

கோலாட்டம்

கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.

கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.

காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.

கும்மி

தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.

வில்லுப்பாட்டு

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.

தெருக்கூத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.

தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.

பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)

பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.

தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.

மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.

சிலம்பாட்டம்

சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரை

புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.

கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு

உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

உடுக்கடிப்பாட்டு

மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.

புலியாட்டம்

தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளின் வகைகள்
 
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பல்வேறு ஆய்வாளர்கள் பல்வேறு முறைகளில் வகைப்படுத்தியுள்ளனர்.  பேராசிரியர்  ஏ.என். பெருமாள் நிகழ்த்து கலைகளில் கலந்துகொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தனியார் கலை(Individual art), குழுவினர் கலை(group art) என்றும் பிரித்துள்ளார். மயிலாட்டம் குதிரையாட்டம், கரடியாட்டம், நொண்டி நாடகம் போன்றவை தனியார் கலைகளாக அமைகின்றன.  வில்லுப்பாட்டு,  தேவராட்டம் தெருக்கூத்துப் போன்றவை குழுவினர் கலைகளாக அமைகின்றன என்கிறார். கலந்துகொள்ளும் கலைஞர்களின் பால்(Sex) அடிப்படையில் ஆடவர் கலை, மகளிர் கலை, ஆடவர் - மகளிர் கலை என்றும், நிகழ்த்தப்படும் காலம், சூழல், நோக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகம்சார் கலைகள்(Society based arts), சமயம்சார் கலைகள்(Religion  based  arts)  என்றும் பலவாறாகப் பிரித்துக் கூறிவிட்டு,  ‘கலைகளை வகைப்படுத்துவது சிக்கலானது’ என்றும் கூறுகிறார்.
 
முனைவர் ஆறு. இராமநாதன்(2001)  நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை,  அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், ஆ. ஆட்டங்கள் என்று இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார்.
 
அ. நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள்
 
நாதசுர இசைக் கச்சேரிகள்(நாட்டுப்புற நாதசுரம்,   நாட்டுப்புற மேளம் கொண்டவை). கே.ஏ. குணசேகரன், விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், கோட்டைச்சாமி, புஷ்பவனம் குப்புசாமி போன்றோரின் பாடல் நிகழ்ச்சிகள் இந்தப் பிரிவில் அடங்குவன.
 
ஆ. ஆட்டங்கள்
 
ஆட்டங்கள் என்னும் இந்தப் பிரிவு கருவி இசை ஆட்டங்கள்,  பாட்டு ஆட்டங்கள்,  அரங்கக் கலைகள், கதை கூறல், போர்க் கலைகள், வித்தைகள் என ஆறாக வகைப்படுத்தப்படுகின்றன.
 
1. கருவி இசை ஆட்டங்கள் : கருவி இசைக்கேற்ப ஒருவரோ பலரோ ஒப்பனையுடன் ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், கரடி ஆட்டம், வழியாட்டம், புலி வேடம், ஒப்பாட்டம், காளி திருநடனம், கொக்கலிக்கட்டை ஆட்டம், வீரபத்ரசாமி ஆட்டம், தேவராட்டம், சேவையாட்டம் இவை இவ்வகையில் அடங்கும்.
 
கரகாட்டம் : கரகம் என்பதற்குப் ‘பூக்குடம்’ என்று பொருள். கரகம் வைத்து ஆடுகின்ற ஆட்டம் கரக ஆட்டமாகும்.   கிராமத் தேவதைகளுக்கு நடக்கும் திருவிழாக்களில் குறிப்பாக மாரியம்மன் திருவிழாக்களில் பக்தர்கள் கரகமெடுத்து ஆடுவர்.  பொழுதுபோக்குக் கலைஞர்களும் இதை ஆடி வருகின்றனர்.  பொதுவாக இவ்வாட்டம் ஆண்களுக்கே உரியது.   தற்போது பெண்களும் பங்கு கொள்கின்றனர்.
 
காவடி ஆட்டம் : கோவில் திருவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் தெருக்களில் காவடி ஆட்டம் நடைபெறும். இதனை இரண்டு வகையாகக் கூறலாம். கந்தன் தொடர்பானது ஒன்று. மற்றொன்று கலை தொடர்பானது.  கந்தன் தொடர்பான ஆட்டத்தில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்வர்.
 
கலை தொடர்பான காவடி ஆட்டத்தில் கலைஞர்கள் பங்குபெறுவர். இவர்களின் காவடிதண்டு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆட்டக்காரர்கள் காவடியைத் தலை உச்சி, நெற்றி, மூக்கு நுனி ஆகியவற்றில் நிறுத்திக் காட்டுவர்.  நையாண்டி மேளத்திற்கு ஏற்ப இவர்கள் காவடியோடு ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆண்களே ஆடுவர்.
 
பொய்க்கால் குதிரை ஆட்டம் : இதனைப் புரவி ஆட்டம் என்றும் அழைக்கின்றனர். அட்டைகளாலும் மூங்கில் கீற்றுகளாலும் குதிரை உருவத்தைச் செய்து அதன் முதுகுப் பகுதி நடுவில் ஒரு மனிதன் நிற்கும் அளவுக்கு ஈடாக இடம்விட்டுப் வைப்பர்.  அதற்குள் ஆடுபவர் புகுந்து நின்று குதிரையைப் பிடித்திழுத்து ஆடுவார்.  கால்களில் மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆணும் பெண்ணும் அரசன், அரசி வேடமிட்டுப் புரவி ஆட்டம் ஆடுவர். இதன் தாயகம் தஞ்சை.
 
2. பாட்டு ஆட்டங்கள் : கருவி இசையோடு பாடல்கள் பாடிக்கொண்டு அல்லது பிறர் பாடும் பாட்டிற்கேற்றபடி ஆடும் ஆட்டங்கள் இவ்வகையில் அடங்கும். குறவன் குறத்தி ஆட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பேயாட்டம், சாமியாட்டம், கருப்பாயி ஆட்டம், பாம்பு நடனம், கைச்சிலம்பாட்டம், உறியடி, மயானக் கொள்ளை, கோணங்கி ஆட்டம் போன்றன இவை .
 
கும்மி ஆட்டம் : வட்டமாக நின்று பெண்கள் கைகளைக் கொட்டி ஆடும் ஆட்டமே கும்மி ஆட்டம். பாடல்களைப் பொறுத்தும் பனைமரக் கும்மி, ஒயில் கும்மி, முத்து வீராயிக் கும்மி என்று பலவாறு கும்மி ஆட்டம் பெயர் பெறும். தீபக்கும்மி, முளைப்பாரிக் கும்மி என்று சூழலைக் கொண்டும் கும்மிகள் பெயர் பெறும்.
 
கோலாட்டம் : சிறிய வண்ணக் கோல்களை அடித்து ஆடுவது கோலாட்டம். இதுவும் பெண்களின் ஆடல். கோல்களில் பொதுவாகச் சிவப்பும் பச்சையும் பூசி இருப்பார்கள். பெண்கள் வட்டமாக நின்று ஆடுவர். பாடிக்கொண்டே கோல்களை அடிப்பதும், முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடிப்பதும், குனிந்து நிமிர்ந்து அடிப்பதும், கைகளை உயர்த்தியும், தாழ்த்தியும் அடிப்பதும் எனப் பலவகைகளில் ஆடுவர்.
 
ஒயிலாட்டம் : ஒயில் என்றால் அழகு. இது அழகு நிறைந்த ஆடல். ஆண்கள் ஆடுவது. ஆட்டக்காரர்கள் பளிச்சென்ற வர்ணங்களில் சட்டைகள்,   காற்சட்டைகள்,   கழுத்துப் பட்டைகள் அணிந்திருப்பர்.  ஆபரணங்களும் பூட்டியிருப்பர்.  கைகளில் வண்ணக் கைகுட்டை பிடித்திருப்பர். கால்களில் சலங்கை அணிந்திருப்பர்.  பாட்டின் வேகத்திற்கு ஏற்பக் கைகளை அசைத்து அசைத்து வேகமாக ஆடுவர்.
 
கிராம நாடகம், மகாபாரதம், முருகன் - வள்ளி, காத்தவராயன், மதுரைவீரன் போன்ற கதைகளைப் பாடல்களாகப் பாடி ஆடுவார்கள். கிராமத்துக் கோவில் விழாக்களில் இது பெரும்பாலும் நடைபெறும். 

3. அரங்கக் கலைகள் : மரபுவழியாக வழங்கிவரும் ஏதேனும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து அக்கதைப் பாத்திரங்களாக வேடம் புனைந்து கொண்டு கருவி இசையின் துணையுடன் ஆடியும் பாடியும் பேசியும் நடித்தும் அரங்கத்தில் நிகழ்த்தக்கூடிய கலைகள் அரங்கக் கலைகள் ஆகும். தெருக்கூத்து, கணியான் கூத்து, பகல் வேடம், பாவைக் கூத்து போன்றன இவை.
 
தெருக்கூத்து : இது தெருவில் திறந்தவெளியில் நிகழ்த்தப்படுவது. இதற்கு மேடையும் திரையும் கிடையாது. தெருக்கள் கூடும் சந்தியில் கம்பங்களை நட்டு விளக்குகளைக் கட்டி ஆட்டக் களரியை உருவாக்குவர். ஒரு பக்கத்தில் நீண்ட மேசையின் மீது இசைக்கலைஞர்கள் அமர்ந்து இருப்பர். மூன்று பக்கங்களிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர். இரவு பத்து மணி அளவில் தொடங்கும் தெருக்கூத்து விடியவிடிய நடைபெறும்.  ஆண்களே பெண் வேடமேற்று நடிப்பர்.  பாரதக் கதைகள் இராமாயணக் கதைகள்,  அரிச்சந்திரன் கதை,  வள்ளி - முருகன் கதை புராண,  இதிகாச புராணக் கதைகள் இக்கலைஞர்களால் நடிக்கப்படும். ஆடலும் பாடலும் கூத்தின் முக்கிய அம்சங்கள்.
 
கனியன் கூத்து : இது கணியான் என்னும் சாதியினர் ஆடும் கூத்து. நெல்லை, குமரி மாவட்டங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் நிகழும் இக்கூத்தும் கதை தழுவியதே.  சுடலை மாடன்,  பன்றி மாடன்,  தளவாய் மாடன்,  கறுப்புசாமி எனப் பல்வேறு கிராமத் தெய்வங்களின் கதைகள் குறிப்பிடத்தக்கவை.  சீதா கல்யாணம்,  முத்துப்பட்டன் கதை போன்ற பிற கதைகளும் இவர்களால் நிகழ்த்தப்படுகின்றன.
 
4. கதை கூறல் : பல்வேறு இசைக் கருவிகளின் துணையுடன் பாடலாகவும் வசனமாகவும் மக்கள் முன் கதை கூறும் பழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது, வில்லுப்பாட்டு, உடுக்கை நிகழ்ச்சி, இலாவணி போன்றன இவை.
 
5. போர்க் கலைகள் : ஒரு காலத்தில் போரிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டு வந்த போர்ப் பயிற்சிகள் இன்றைய நிலையில் பொழுதுபோக்கிற்கு என மக்கள் முன் நிகழ்த்தப்படும் போர்க் கலைகளாக (சிலம்பம், கத்திச்சண்டை) மாறியுள்ளன.
 
6. வித்தைகள் : இன்றைய நிலையில் மக்களைக் கவருவதற்காக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றிலும் வித்தைகள் இடம்பெறுகின்றன.   ஆயினும் கண்கட்டு வித்தை,   சாட்டை அடி, தொம்பாட்டம் முதலியவை வித்தைகள் காட்டுவதையே நோக்கமாகக் கொண்ட கலைகள், பாம்பினை வைத்து வேடிக்கை காட்டுவதும் குரங்கினைப் பயிற்றுவித்து ஆடச் செய்வதையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.
 
மேற்கண்ட இந்த வகைப்பாடு நெகிழ்ச்சியானது. ஒரு பிரிவில் அடக்கப்படும் கலை சில நேரங்களில் வேறு பிரிவிற்கும் பொருத்தமாக இருக்கும்.  சான்றாகச் சேவையாட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டம் எத்திலாமலைக் காட்டூர் எனும் ஊரில் சேவையாட்டம் கருவி இசைக்கேற்ப ஆடும் கருவி இசை ஆட்டமாகவே நிகழ்த்தப்படுகின்றது.  ஆனால் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் நடைபெறும் சேவையாட்டத்தில் பாடல்கள் முதன்மை பெறுகின்றன.
 
நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்படும் சூழல்
 
ஒவ்வொரு நிகழ்த்து கலையும் ஏதோ ஒரு சூழல் காரணமாகவே நிகழ்த்தப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் தமிழக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்படும் சூழல்களைப் பற்றிக் கீழே காணலாம்.
 
1. கோயிற் சடங்கின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்படுகின்றன.
 
2. கோவில் விழாக்களில் நடத்தப்படுகின்றன.
 
3. வாழ்வுச் சடங்குகளின் போது (திருமணம், பூப்பு, காது குத்தல்) நிகழ்த்தப்படுகின்றன.
 
4. சாவுச் சடங்குகளின்போது (இறந்த நாள் 16ஆம் நாள் சடங்கு, ஆண்டு நிறைவு நாள்)நிகழ்த்தப்படுகின்றன.
 
5. அரசியல் விழாக்களின் (தலைவர்கள் பிறந்த நாள், வரவேற்பு, ஊர்வலங்கள், கூட்டங்கள்) போது நிகழ்த்தப்படுகின்றன.
 
6. அரசு விழாக்களின்(குடியரசு தினம், சுதந்திர தினம், அயல் நாடுகளில் இந்திய விழாக்கள், அயல் மாநிலங்களில் கலாச்சார விழாக்கள்) போது நிகழ்த்தப்படுகின்றன.
 
7. பிரச்சார நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றன.
 
8. அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்கள், ஆண்டு விழாக்கள், பொங்கல் விழாக்கள், பெற்றோர் தின விழாக்கள், காவல்துறை விழாக்கள் ஆகியனவற்றின்போது நிகழ்த்தப்படுகின்றன.
 
9. இரத்தல் அல்லது யாசித்தலுக்காக நிகழ்த்தப்படுகின்றன(நாட்டுப்புறக் கலைகள் ஆறு. இராமநாதன், 2001).

7.2.2 நாட்டுப்புற நிகழ்த்தாக் கலைகள்
 
கலையழகுடன் வீட்டுப் பயன்பொருட்களை உருவாக்கும் கலைகளை நிகழ்த்தாக் கலைகள் என்பர். இவை அனைத்திலும் நாட்டுப்புறக் கலைஞனின் கைத்திறன் முதன்மையானதாகத் திகழ்வதால் இவற்றைக் ‘கைவினைக் கலைகள்’ என்றும் குறிப்பிடுவர். ‘‘நாட்டார் கைவினைக் கலைகள் என்பவை மரபுவழிக் கலைகளே.  மரபின் ஆற்றலை ஒருவன் கைவினைக் கலைகளில் தெளிவாகக் காணலாம். அண்மைக் காலம் வரை கைவினைக் கலைகள் குறித்த உத்திகளும்,  தினுசுகளும்(Designs)  பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் வழிவழியாகச் செய்யப்பட்டு வந்தன’’ எனத் தே. லூர்து(1997, ப. 358) கூறுவது கவனத்திற்குரியது.
 
ஒரு சமுதாயத்தின் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றோடு அந்நாட்டின் கைவினைக் கலைகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கைவினைப் பொருட்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் வகையிலும் கலைத்தன்மையுடனும் உருவாக்கப்படுகின்றன.    இவை பரம்பரை பரம்பரையாகக் கற்றுத் தரப்படுகின்றன.
 
நாட்டுப்புற நிகழ்த்தாக் கலையைப் பொருட் கலை,  அழகுக் கலை /  ஒப்பனைக் கலை என இரண்டாக வகைப்படுத்தலாம்.
 
1. பொருட் கலை
 
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை உருவாக்குவதும் அவற்றை அழகுபடுத்துவதும் இக்கலையில் அடங்கும்.   மரவேலை செய்யும் தச்சர்களும்,  குயவர்களும்,  பெண்களும் இக்கலை வல்லுநர்களாகத் திகழ்கின்றனர்.
 
விளையாட்டுப் பொருட்கள்,  வீட்டு உபயோகப் பொருட்கள்,  வீட்டுத் தூண்கள்,  வாயில்கள், உத்தரங்கள் போன்ற மரத்தினாலான பொருட்கள்,  மண்பாண்டப் பொருட்கள் போன்றன நாட்டுப்புறக் கைவினைப் பொருள்களில் சிறப்பிடம் பெறுவனவாகும். அவற்றில் சிலவற்றை இனிக் காணலாம்.
 
கூடை, முறம் கட்டுதல் : வீட்டிற்குத் தேவையான கூடை முறங்களைக் கட்டும்போதுகூட நாட்டுப்புற மக்கள் கலையெழிலுடன் செய்கின்றனர். பிரம்பு, நாணல், பனையோலை, மூங்கில் கொம்பு, பட்டை, ஈச்ச மிளாறு, புளிய மிளாறு போன்றவற்றால் கூடை முடைகின்றனர். கூடை, பெட்டி, பாய், முறம் போன்றவை இக்கலைத் தொழிலில் அடங்கும். இக்கலையில் பல வண்ணங்களின் சேர்க்கையும் பல வடிவங்களின் அமைப்பும் நெஞ்சை ஈர்க்கும் வகையில் பேரெழிலுடன் விளங்கும்.
 
மண்பாண்டக் கலை : தமிழகத்தின் மண்பாண்டக் கலை மிகவும் சிறப்புப் பெற்றது. மண்பாண்டம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட கைவினைஞர்கள் கலையழகு மிளிரும் வண்ணம் பொருட்களைப் பண்டைய திறத்துடன் இன்றைய கண்ணோட்டத்தையும் கலந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து காண்போரைக் கவரும் வண்ணம் தருகின்றனர்.  மண்ணால் செய்யப்படும் பொருட்கள் தொடக்க காலங்களில் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் தந்தன.  தற்போது காலச் சூழலில் இவற்றின் பயன்பாடு குறைந்தபோது அதை ஈடுகட்டும் வண்ணம் கலைத்திறனை ஊட்டி அழகுணர்ச்சியை ஏற்றிக் கலைப்பொருட்களாக அவற்றை மாற்றிவிடுகின்றனர்.  ஒரு காலத்தில் அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் இன்று ஐந்து நட்சத்திர ஆடம்பரத் தங்கும் விடுதிகளில் கலைப்பொருட்களாக, காட்சிப் பொருட்களாக இடம்பெற்றுள்ளன.
 
காகிதப் பொம்மைகள் : களிமண்ணால் பொம்மைகள் செய்வதைப் போலக் காகிதக் கூழ் கொண்டு பொம்மைகள் செய்யப்படுகின்றன.  இவை இன்றைய நாகரிகப் போக்கிற்கேற்பக் கலை வளர்ச்சி பெற்றுள்ளன. உலோகப் பொம்மைகளுக்கு நிகராகவும் காகிதப் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
 
மரப்பொம்மைகள் : குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான அழகான பொம்மைகள் மரத்தினால் செய்யப்படுகின்றன.   இத்தொழில் நெடுங்காலமாக இருந்து வருகின்றது.   தேரின் சக்கரங்களிலும் வீட்டுக் கதவுகளிலும் அழகான மரப்பொம்மைகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சில அரண்மனைகளிலும் செட்டிநாட்டு மாளிகைகளிலும் கூட மரவேலைப்பாடுகள் அதிகம்.  கோயில் வாகனங்களும் மரத்தினால் செய்யப்படுபவையே.
 
உலோகச் சிற்ப வேலைப்பாடு : தமிழகத்தின் உலோகச் சிற்ப வேலைப்பாடு உலகளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று ஆகும்.  உலோகங்களில் தெய்வச் சிலைகளும் பாவை விளக்குகளும் செய்யப்படுகின்றன. இவை தவிர வெண்கல வார்ப்புக் கலையும் தமிழகத்தில் சிறப்புற்று விளங்குகின்றது.
 
தஞ்சாவூர்த்தட்டு, நெல்மணி, ஏலக்காய் மாலை செய்தல் : தஞ்சை என்றாலே பல கலைகளின் பிறப்பிடம் எனக் கூறலாம்.  தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதிகளில் நெல்மணி, ஏலக்காய் போன்றனவற்றைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்கின்றனர். இவை நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டவை.  நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவருக்கு நினைவுப் பரிசாகத் தஞ்சாவூர்த் தட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது.  தஞ்சாவூர்ப் பொம்மை உலகளவில் புகழ் பெற்றது ஆகும்.
 
மேற்கண்டவை நாட்டுப்புறப் பொருட் கலைக்கான ஒரு சில சான்றுகளே.  இவை தவிரத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அந்தந்த இடங்களில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன.
2. அழகுக் கலை / ஒப்பனைக் கலை
 
நாட்டுப்புற மக்கள் தம் வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களையும் தங்களையும் அழகுபடுத்தும் நோக்கில் இக்கலை அமைந்துள்ளது.  இவற்றில் அழகுணர்ச்சி மட்டுமே முதன்மையானதாகக் கருதப்படும். நாட்டுப்புற ஓவியங்கள், கோலமிடுதல், பச்சை குத்துதல், மனித ஒப்பனை, தெய்வங்களை ஒப்பனை செய்தல் போன்றவற்றை இவற்றிற்குச் சான்றாகக் கூறலாம்.
 
நாட்டுப்புற ஓவியங்கள் : கிராமங்களில் அறுவடை இல்லாத காலங்களில் அங்கு வாழும் மக்கள் கலைகளில் ஈடுபடுவர்.  அக்கலைகளில் ஒன்று ஓவியக் கலை.  துணிகளிலும்,   மரங்களிலும், காகிதங்களிலும் ஓவியங்களைத் தீட்டுவர்.   சுவரோவியங்கள்,   அருளோவியங்கள்(கடவுள்களின் ஓவியங்கள்),  பாண்ட ஓவியங்கள்,  தோற் கூத்து ஓவியங்கள் போன்றவை இக்கலையின் பல வகைகளாகும்.
 
தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் காலத்தில் காகிதங்களில் பல வண்ண,  ஓவியங்களை உருவாக்கினர். இக்கலையின் வளர்ந்த நிலையே மரச்சிற்பம், கற்சிற்பம் எனலாம்.
 
கோலமிடுதல் : கோலம் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். இந்தியா முழுவதும் கோலமிடும் வழக்கத்தினைக் காணலாம். நாள்தோறும் வீட்டு வாயில்களில் பெண்கள் கோலமிடுவதைக் காணலாம். வீட்டின் உட்பகுதிகளிலும் கோயில்களிலும் கோலங்கள் இடப்படுகின்றன.  அரிசி மா,  கல் மா,  மண், வண்ணப்பொடிகள் ஆகியவை கோலப்பொடியாகப் பயன்படுகின்றன.  வட்டம்,  சதுரம்,  பூக்கள், இயற்கைத் தோற்றங்கள் போன்ற பல வடிவங்களில் கோலங்கள் அமைவதுண்டு.
 
பச்சை குத்துதல் : பச்சை வண்ணத்தில் மக்கள் தம் உடம்பில் பல வடிவங்களை வரைந்து கொள்வதனைப் பச்சை குத்துதல் என்பர். மார்பு, மேற்கை, முன்னங்கை, கால் போன்ற உடற்பகுதிகளில் பச்சை குத்திக்கொள்வர்.
 
மஞ்சள் பொடி,  அகத்திக்கீரை ஆகியவற்றை அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்துக் கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கிக் கொள்வர்.  மைக்குள் ஊசியை அழுத்தி எடுத்து ஊசியால் கோடுகளை வரைவர்.  பின்னர்க் குளிர்ந்த நீரில் நன்கு கழுவி மை தடவுவார்கள், தெய்வ வடிவங்கள், தேள், பாம்பு போன்ற உருவங்களையும் பெயர்களையும் பச்சை குத்திக்கொள்வது பெருவழக்கம்.
 
ஆறு. இராமநாதன்(1997) ‘நாட்டுப்புற இயல் ஆய்வுகள்’ என்னும் நூலில் இரா. பவுன்துரையுடன் இணைந்து ‘கிராமப்புற ஓவியங்கள்’  என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.  இதில் நாட்டுப்புற ஓவியங்களை அழகோவியங்கள்,   சடங்கோவியங்கள் என இரண்டாகப் பகுத்து விளக்கியுள்ளார்.  அழகுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை.  அழகோவியங்கள் விழாச்சடங்கோடு தொடர்புடைய மந்திர ஆற்றல் உள்ளதாக நம்பப்படும் ஓவியங்கள் சடங்கோவியங்கள்.
 
நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பை விளக்கித் ‘தாமரை’ என்னும் இதழ் தலையங்கம் எழுதியுள்ளதைச் சு.சண்முகசுந்தரம் தமது ‘நாட்டுப்புற இயல்’ என்னும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.  ‘‘இந்தப் பண்டைய பெருங்கலைகள் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வியப்பூட்டும் திறத்தினையும் வெளிப்படுத்தியுள்ளன. அறத்தையும், வீரத்தையும், அன்பையும், பண்பையும், நாட்டுப்புறப் பற்றையும், முறையான இல்லற வாழ்வின் மாண்பினையும் தேனோடு குழைத்துத் தரும் அருமருந்தினைப் போல் ஊட்டியுள்ளன. ஆயிரம் ஏடுகளும் பல நூறு மேடைகளும் செய்ய முடியாத சாதனையை இந்தப் பழம்பெருங் கலைகள் கோடானுகோடி கிராம மக்களிடையே ஆற்றியுள்ளன’’.

பறையிசை முழக்கத்தோடு நம் தொன்ம ஆட்டக் கலைகள்

கலைகளின் வீச்சு என்பது கலையோடு மட்டும் நின்று விடாமல், அதை தாண்டியும் பல வடிவங்களில் உருவெடுக்கவல்லது. பாடல், ஆட்டக் கலைகள் என்பது போராட்டங்களின் வெளிப்பாடாகவும் பிரசாரக் கருவியாகவும் முகம் காட்டுபவை. உலக அளவில் பாப் மார்லே, இந்தியாவில் நாகண்ணா, எல்லண்ணா, கத்தார் போன்றோர்களது பாடல்கள், இசை வடிவமாக மட்டுமின்றி மக்களின் கிளர்ச்சிக்கும் வழி வகுத்தவை. இசையும் ஆட்டமும் பின்னிப் பிணைந்தவை.
தமிழர் இசையின் அடையாளமான பறையிசை முழக்கத்தோடு நம் தொன்ம ஆட்டக் கலைகளை அரங்கேற்றி பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் உள்ளாக்கும் சீரிய பணியை, இன்றைக்கு தமிழகத்தின் பல கலைக்குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. அப்படியாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது ‘முரசு கலைக்குழு’. இக்குழுவை தொடங்கியவர்களுள் ஒருவர் செல்வி. மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர். இப்போது நாடகத்துறையில் முனைவர் ஆய்வு மேற்கொள்கிறார் என்கிற தகவல்களையெல்லாம் தாண்டி, 32 வகை ஆட்டக்கலையை கற்றுத் தேர்ந்து பயிற்சியும் அளிப்பவர் என்பது இவரது முக்கிய அடையாளம்!
“கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் என் பூர்வீகம். இயற்கையோடு கொஞ்சிக் குலாவுகிற மலைக்கிராம வாழ்க்கை. காற்றாடி மலை எங்களது ஊரின் பெயர்… அது ‘தேவசகாயம் மவுண்ட்’ என பெயர் மாறியதற்கு பின்புலத்தில் ஒரு வரலாறு உள்ளது. 12ம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது கேப்டன் டே லெனாய் தலைமையிலான டச்சுப்படை போர் தொடுத்தது. அப்போது அரசராக இருந்த மார்த்தாண்ட வர்மன், தனது படையைக் கொண்டு போரில் வெற்றி பெற்று, டே லெனாயை கைது செய்தார். சிறையில் இருக்கும் காலகட்டத்தில் டே லெனாயும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படைத் தளபதி நீலகண்டப் பிள்ளையும் நட்பு கொள்கின்றனர்.
கிறித்துவ மதத்தின் கோட்பாடுகளை டே லெனாய் விளக்கவும், அதைக் கேட்ட நீலகண்டப் பிள்ளை கிறித்துவராக மாறி தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக் கொள்கிறார். இந்த மதமாற்றம் பிடிக்காத மார்த்தாண்ட வர்மன் தளபதி தேவசகாயத்தை இந்து மதத்தைப் பின்பற்றக் கூறுகிறார். இதற்கு மறுத்த காரணத்தால் தேவசகாயம் காற்றாடி மலையில் ஒரு சிறையில் அடைக்கப்பட்டு, பின் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதனால்தான் காற்றாடி மலை, தேவசகாயம் மவுண்ட் ஆனது.எங்களது ஊரில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை ‘விபூதி புதன்’ கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
விபூதி புதனுக்கு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ச்சியாக 10 நாளைக்குத் திருவிழாதான். சிறு வயதிலிருந்தே தேவாலயத்தில் நடக்கும் கொண்டாட்ட நிகழ்வுகளில் நடனமாடி இருக்கிறேன். கேரளாவைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய ஆசிரியரிடம் ஆறாம் வகுப்பு வரையிலும் பரதம் கற்றுக் கொண்டேன். திருமணம் மற்றும் சுபகாரிய நிகழ்வுகளில் நடனமாடுவது என் மனதுக்கு நெருக்கமான செயலாக இருந்தது. அப்போது எனக்குப் படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லை. தேர்ச்சிப் பெற்றால் போதும் என்கிற மனநிலை மட்டுமே இருந்தது. அப்படியிருந்தும் பத்தாம் வகுப்புப் பொதுத்
தேர்வில் தோல்வியடைந்து வீட்டில் இருந்தேன்.
ஆயர் இல்லத்திலிருந்து எங்கள் ஊர் தேவாலயத்துக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. 200 ரூபாய் கட்டணத்தில், ‘களரி மக்கள் பண்பாட்டு மையம்’ கிராமிய ஆட்டக்கலைகளை கற்றுத்தரும் அறிவிப்பு அது. கன்னியாஸ்திரி ஒருவர்தான் எனக்கான தொகையைக் கட்டி என்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். மே மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி. கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், லெஸ்ஸிம் ஆகிய ஆட்டக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பயிற்சி முடிந்த அடுத்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்றவர்களின் அரங்கேற்றம். அதில் என்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருந்ததை ஒட்டி, களரி கலைக்குழுவில் இணைந்து கொள்ளும்படி கேட்டனர்.
ஆட்டக்கலை மீதிருந்த ஆர்வத்தில் நானும் சம்மதித்தேன். 12ம் வகுப்பு முடித்ததும் இளைங்கலைப் பொருளாதாரம் பயின்றேன். படிப்புக்கு இடையிடையே களரி கலைக்குழுவின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பங்காற்றவும் செய்தேன்.களரி கலைக்குழுவில் இணைந்ததுதான் என் வாழ்வின் திருப்புமுனை. ஆட்டம் என்பது கொண்டாட்டமான நிகழ்வு மட்டுமல்ல… வீரியம் மிக்கது என்பதை பல கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக உணர முடிந்தது. தலித் ஒடுக்குமுறைகள், பெண்ணுரிமை மறுப்பு என சமூகத்தின் பல்வேறு படிநிலையிலான பிரச்னைகளைப் பற்றியும், அதற்கு கலைகள் சார் முன்னெடுப்புகளைப் பற்றியும் கற்றுக் கொள்ள முடிந்தது.
ஆடல், பாடல், நாடகம் என பற்பல நிகழ்வுகளை அரங்கேற்றினோம். எல்லாமே சமூக மாற்றம் கோருபவைதான். கலைக்குழு செயல்பாடுகளில் அதிக அளவில் பங்கேற்றுக் கொண்டிருந்த வேளையில், கிராமியக் கலைகளுக்குள் இயங்குவதுதான் எனது வாழ்க்கை என்பதை உறுதிபடத் தீர்மானித்தேன்’’ எனும் செல்வி, ஆட்டக்கலைகளின் பயிற்சி நூலையும் தொகுத்திருக்கிறார். “களரி கலைக்குழுவில் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த போது, ஆட்டக்கலைகளை கற்றுக்கொள்வோருக்கும், பயிற்சியளிப்போருக்கும் வழிகாட்டும் பாடமுறைகளைக் கொண்டு நூல் கொண்டு வரலாம் என முடிவு செய்தோம்.
அதற்காக கிராமிய ஆடல் கலைகளின் முறையான ஆட்ட வடிவத்தையும் அதன் ஒவ்வொரு படிநிலைகளை விளக்கியும் ‘அடவு கட்டி ஆட’ எனும் நூலைத் தொகுத்தேன். சென்னை டான்போஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்யூனிகேஷன் அண்ட் ஆர்ட்ஸ் மற்றும் களரி கலைக்குழு இணைந்து கிராமியக் கலைகள் குறித்தான ஆவணப்படம் தயாரித்தனர். அப்படத்தில் எனது ஆட்டமும், நான் பயிற்சியளிப்பதும் இடம் பெற்றிருக்கும். கால சூழலில் களரி கலைக்குழுவுக்குள் ஏற்பட்ட சிறு முரண்பாடுகள் காரணமாக, நான் மற்றும் சக கலைஞர்களான ஆனந்த், ஜாய், முனிய ராஜா, கிளாட்சன், சஜூ, ப்ரைட், செல்வகணேஷ் உள்பட 15 பேர் அங்கிருந்து வெளியேறி, ‘முரசு கலைக்குழு’வைத் தொடங்கினோம்.
‘எல்லோரும் சமம், பெண்களுக்கு முன்னுரிமை யும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும்’ என்பதை எங்களது கலைக்குழுவின் தீர்மானமாக முன்மொழிந்தோம். தலித் கலை விழாக்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கலைநிகழ்ச்சிகள், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கூட்டங்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான கூட்டங்களில் எல்லாம் எங்களது கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. விளிம்புநிலை மக்களை தேடிச்சென்று தெருமுனைகளில் நடத்தும் இது போன்ற கலைநிகழ்ச்சிகள்தான் மக்களுக்கானவை.
இதற்காக கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை. தங்களது பலத்த கைதட்டல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் மக்கள்தான்” என்கிற செல்வியின் கணவர் ஆனந்த். இவர்களை இணைத்ததும் இந்தக் கலைதான்! “திருமணம் செய்து கொண்டு, ஒரு குடும்பத்தலைவியாக வீட்டை நிர்வகிப்பவளாக இருப்பதில் எனக்கு துளியளவும் உடன்பாடில்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் முறை மீது எனக்கு கடும் விமர்சனம் இருந்தது. அதனால் திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். களரி கலைக்குழுவிலிருந்து என்னுடைய கலைப் பயணத்தில் உடன் பயணித்து வந்தவர் ஆனந்த்.
அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். அச்சூழலில்தான் குழுவில் இருந்தவர்கள், ‘ஆனந்தைத் திருமணம் செய்து கொள்’ என்று தங்களது அபிப்ராயத்தைத் தெரிவித்தனர். பின்னர் நானும் அவரும் கலந்துரையாடி, புரிதலுக்குள் வந்து, திருமண முடிவெடுத்தோம். வரதட்சணையின்றி, தாலி மறுத்து இருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட முற்போக்குத் திருமணம் புரிந்தோம். மகிழினி மணிமாறன்தான் எங்களது திருமணத்துக்கு முன்னின்று பூமாலை எடுத்துக் கொடுத்தவர்!” என்கிறார் செல்வி. இத்தம்பதிக்கு மகரந்தன், மேதினி என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூடப்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பறையாட்டம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், லெஸ்ஸிம், களியாட்டம், சக்கையாட்டம், சாட்டைக்குச்சி, சிலா (மான் கொம்பாட்டம்), கம்பத்தாட்டம், இருளர் ஆட்டம், குறும்பர் ஆட்டம், கோத்தகிரி கும்மி, கேரளா கும்மி, சோட்டா நாக்பூர் சாதிரி, வயநாடு துடி இனமக்கள் நடனம், குஜராத் கார்பா, சிர்மி, மாட்டுக்கொம்பாட்டம், சம்பல்புரி என்று நீள்கின்றன செல்வி கற்றுத் தேர்ந்திருக்கும் கலைகளின் பட்டியல். தமிழ் கிராமியக் கலைகளோடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் ஆட்டக்கலைகளும் இதில் அடங்குகின்றன.
“முரசு கலைக்குழு மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தி பயிற்சிகள் அளித்து வந்தாலும், இன்னமும் புதியதை கற்றுக்கொள்கிற ஆர்வம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்காக சென்றிருக்கிறேன். அப்படிச் செல்கையில் அப்பகுதி மக்களின் ஆட்டக்கலையையும் கற்றுக்கொண்டு வந்து விடுவேன். இப்படியாகத்தான் இத்தனை கலைகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது. குறும்பர் ஆட்டத்தை சத்தியமங்கலம் அருகே ஆசனூரிலும், கோத்தகிரியில் பழங்குடிகளின் கும்மியையும் கற்றுக்கொள்வதற்காக பயணம் செய்தேன்.
ஒவ்வொரு ஆட்டக்கலையும் அந்தந்த மக்களுடைய வாழ்வியலின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கம்பத்தாட்டம் என்பது நீலகிரி பகுதி மக்களின் ஆட்டம். தேயிலைப் பறித்து பின்னால் உள்ள கூடையில் போடும்படியான செயலின் ஆட்ட வடிவம் அது. இப்படியாக அன்றாட செயல்களை நளினப்படுத்தும்போது, அது ஆட்டக்கலையாக உருவெடுக்கிறது. இது போன்ற கலைகள் ஆளுமைத் தன்மையை வளர்க்கக் கூடியவை. உடல் மற்றும் மன நலத்துக்கும் உகந்தவை” என்கிறார் செல்வி.
கலைச் செயல்பாடுகள் ஒருபுறமிருந்தாலும் அவரது படிப்பு இன்றளவிலும் நீடித்துக் கொண்டிருக்கிறது. முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்த செல்வி, 2008ல் சில மாதங்கள் சென்னை சிந்தி கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் ‘குமரி மாவட்ட காணி பழங்குடி மக்களின் நிகழ்த்துக் கலைகளும் தொடர்பியலும்’ என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
“டிஸ்கவரி சேனலில் பழங்குடி மக்கள் குறித்தான ஆவணப் படங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அதன் விளைவாகத்தான் பழங்குடி மக்களின் கலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள எண்ணினேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, பேச்சிப்பாறை பகுதிகளில் காணி இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வாழை மற்றும் ரப்பர் விவசாயமே அவர்களது வாழ்வாதாரம். வனத்துக்குள் கிடைக்கும் விலைமதிப்புள்ள பொருட்களை சேகரம் செய்வது அவர்களது தொழிலாக இருந் தாலும், வனம் என்றைக்கு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ, அப்போதே இவர்களது சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டது.
தொன்மையான வாழ்வியலையும், அது சார் கலைகளையும் கொண்டு அதை இன்று வரையிலும் பின்பற்றி வாழ்ந்து வருவதால்தான் அவர்களை ‘பழம் குடிகள்’ என்று கூறுகிறோம். இம்மக்களிடம் புராணக்கதைகளை மையப்படுத்திய ‘காக்கார் களி’ எனும் நாடக வடிவம் இருக்கிறது. இதை குறவன்-குறத்திக் களி என்றும் சொல்கின்றனர். கும்மி, கோலாட்டம், குறவன்- குறத்தி ஆட்டம் எனும் ஆட்டக்கலை களையும் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களின் கலை வடிவங்கள் எப்படி அவர்களது வாழ்வியலோடு தொடர்புபட்டவை என்பது பற்றியான ஆய்வை மேற்கொண்டிருக்கிறேன்” என்கிறார் செல்வி.
‘உலகின் மூத்த மொழி தமிழ்… நம்மிடம் தொன்ம அடையாளங்கள் பெருகிக் கிடக்கின்றன. முழுமையான வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்த் தொன்மம்தான் உலகுக்கே முன்மாதிரி. நமது வாழ்வியலும் தமிழ் தொன்மத்துக்கு திரும்ப வேண்டும்’ என்பதுவே முழங்கும் செல்வியின் பறை நமக்குச் சொல்லுகிற சேதி…

நுன்கலையும் சமுதாயமும்

இன்றுள்ள நமது சமுதாயம் இரண்டு வர்க்கங்களைக் கொண்டது. அவை, பொருளும் வசதியும் படைத்தவர்கள் சமுதாயம். அடுத்தவர்கள் பொருளும் வசதியுமற்ற சமுதாயம். இந்த சமுதாயப்பிரிவு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

பொருள் படைத்த வர்க்கத்தரிடம், எல்லா வசதிகளும் இருக்கின்றன; ஆகையால் அவர்கள் கல்வி, அறிவு, கலைகள் முதலியவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர். பொருள் வசதி இல்லாவிட்டாலும் கல்வி, அறிவு, கலை, முதலியவற்றிலே சிறந்தவர்கள் பொருள் படைத்த வர்க்கத்தாரை ஓட்டியே வாழ்ந்து வந்தனர்; வாழ்ந்தும் வருகின்றனர்.

பொருளற்ற வர்க்கத்தினர் பொரும்பாலும் உழைப்பாளிகளாகவும், தொழிலாளிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைப் படகினை ஓட்டுவதற்கே பெரும் பொழுதை கழிக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் கல்வியிலோ; அறிவிலோ, கலையிலோ தேர்ச்சி பெற நேரமும் இல்லை; பொருளாதார வசதியும் இல்லை.

இந்தக் காரணத்தால், நமது நாட்டில் இன்று வளர்ந்திருக்கும் கலைகள், காவியங்கள், கவிதை, இலக்கியங்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் சுவைத்துப் பொழுது போக்குகின்றர்.
வளர்ந்திருக்கும் கலைகளும், கவிதைகளும், கதைகளும் உயர்ந்த வர்க்கத்தினரின் வாழ்க்கைகளை சித்தரிப்பவனவாகவே அமைந்திருகினறன. சினிமா உட்பட.
கலைகள், கதைகள், கவிதைகள், காவியங்கள் வளர்வதற்கு வசதி படைத்தவர்களே உதவி செய்து வந்தனர், வருகிறார்கள். இவைகள் தங்கள் பொழுதுபோக்குவதற்கு உதவின என்ற காரணத்தால்தான் இவைகள் வளர்வதற்கும் உதவி செய்து வந்தனர்.

வசதி படைத்தவர்களால் கலைகள் வளர்ந்தன, என்பதைக் கொண்டு, வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கலையுணர்ச்சி படைத்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும் கலை உணர்ச்சி உண்டு. அவர்களும் கவிதைகளையும் காவியங்களையும், கலைகளையும் படித்து, கேட்டு, பார்த்து, சுவைக்கும் உணர்ச்சி
படைத்தவர்கள். இத்தகைய மக்களுக்கான கலைகளும், நாட்டில் ஒரு புறத்தில் வளர்ந்து கொண்டுதான் இருந்தன. இவர்கள் சுவைக்கும் வகையில் கலைகளை வளர்த்த அறிஞர்களும் நாட்டில் இருந்தனர்.

கூத்திலே அரசர்களுக்காக ஆடும் கூத்து, பொதுமக்களுக்காக ஆடும் கூத்து என்று இரண்டு பிரிவு இருந்தன; இது இலக்கியங்களில் காணப்படும் செய்தி. இது போலவே இலக்கியங்களிலும் பொதுமக்களுக்கான இலக்கியங்கள், உயர்ந்த வர்க்கத்தினருக்கான இலக்கியங்கள் என்று இரு பிரிவுகள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக கலையை எடுத்துக் கொள்வோம். பரதநாட்டியம் என்பது அரியதொரு கலை.
இதை நுண்ணறிவு, கலைரசனை படைத்தவர்கள்தான் பார்த்து அதன் நளினத்தை சுவைக்க முடியும். மற்றவர்கள், நடனமாடும் மங்கையின் அழகைத்தான் சுவைக்க முடியும். ஆகவே ,
கல்வி அறிவு படைத்த ஓய்வு நேரத்தை மிகுதியாகப் பெற்ற வசதி படைத்த- மக்களின் பொழுதுபோக்குக்காக வளர்ந்த கலைதான் இது.

கரகம் எடுத்து ஆடுதல், காவடி தூக்கி ஆடுதல், கும்மி-கோலாட்டம் முதலியவைகளும் கலைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இக்கலைகளை உழைப்பார்களும், வறியவர்களும் பார்த்து பரவசம் அடைகிறார்கள். பரத நாட்டியத்தைவிட இக்கலைப் பயிற்சி எளிது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால் இக்கலைகளை மக்கள் கலை என்று சொல்லிவிடலாம்.
பாடல்களும் , சங்கீதங்களும் நுண்கலையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்கீதம்
கர்நாடக இசைக் கலைஞர்கள் ராகம், தாளம், பல்லவிகளிலே சொக்கி அதில் லயத்துவிடுவார்கள். ஆ னால், ஏழைப் பொதுமக்களுக்கு இத்தகைய உயர்ந்த சங்கீதங்களை ரசிக்க, சுவைக்க முடியவதில்லை. பாடல்களிலும், தியாகராஜ கீர்த்தனம், முத்துத்தாண்டவர் பதம் போன்ற சரித்திரக் கீர்த்தனை முதலியவைகளைப் பொதுமக்கள் அவ்வளவாக சுவைப்பதில்லை.
எளிதாக பாடக் கூடிய - நன்றாக விளங்கக் கூடிய தெம்மாங்கு, தில்லானா, டப்பா, சிந்து முதலிய பாடல்கள். இவ்வகையான எளிய பாடல்கள் பொதுமக்கள் சுவைக்கின்றனர். இதனை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகவே, கலை, சங்கீதம்பாட்டு இவைகளிலே இரு பிரிவுகள் இருப்பதைக் காண்கிறோம்.

காவியங்களை எடுத்துக் கொள்ளுவோம். காவியங்களும் இருவகையாக , அதாவது பொது மக்கள் காவியம், உயர்ந்த வர்க்கத்தினர் காவியம் என்று இரண்டு வகையாகவே வளர்ந்திருக்கினறன.

நிகழ்த்துகலை மரபு: கோலாட்டக் கலைவடிவங்கள்

நாட்டுப்புற நிகழ்த்துகலைகள், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. அவை பல்வேறு சமூக, வெளிப்பாட்டினால் உருவாகின்றன. அவ்வுணவர்வு வெளிப்பாடுகளுக்கு ஏற்ப மொழிவழி இசையும் பாடலும் உருவாகி அதற்கேற்ப பலவகையான உடல் இயக்க அசைவுகளை உருவாக்குகின்றன. இவ்வுடல் இயக்க அசைவுகள் பாடல் இசைக்கேற்ப முறைப்படுத்தப்படும்பொழுது, ஆட்டங்கள் உருவாகின்றன. ஆட்டத்தின் இயக்கச் செயற்பாட்டு நிகழ்வுகள் பல்வேறு சடங்கு, கலை, பொருளாதாரம் மற்றும் செயற்கை சூழல்களுக்கு ஏற்ப சமூக மதிப்பு அடிப்படையில் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்படுவதால், அவற்றின் ஒட்டு மொத்தமான கலை நிகழ்வு அமைப்பை நாட்டுப்புற ஆட்டங்கள் அல்லது நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் என்பது பொருத்தமாகும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை இசையாகிறது. கற்கள் முறையாக அடுக்கப்படும் பொது கட்டிடக்கலை உருவாகிறது. வடிவங்கள் வகுத்துச் சீர்படுத்தப்படும்போது சிற்பக்கலை ஆகிறது. கோடுகள் ஒன்றிணைக்கப்படும்போது ஓவியக்கலை உருவாகிறது. கற்பணை முறைப்படுத்தப்படும்பொழுது கவிதைக் கலையாகிறது. அவ்வாறே ஒழுங்குபடுத்தப்பட்ட அசைவுகள் நடனக்கலை ஆகிறது. இக்கருத்தின் அடிப்படையிலேயே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளும் உருவாகின்றன. எனவே அவை தனித்தன்மை கொண்டவை.
நாட்டுப்புற ஆட்டங்களின் அமைப்பும் பொருளும் வேறுபட்டவை. அவை மக்கள் வாழும் சமூகத்தின் ஒரு கூறாக அமைந்தாலும் அவற்றை ஆய்வு செய்யும்போது, எங்கோதொலை தூரத்திலுள்ள ஒரு சமூகத்தை ஆய்வு செய்ய பயன்படுத்தும் உற்று நோக்கல் உத்திகளையும், ஆய்வு நெறிமுறைகளையும் பயன்படுத்தவேண்டியுள்ளது என்பது லெவிஸ்ட்ராஸ் கருத்து. இந்நிலை, நாட்டுப்புற நிகழ்த்துகலைகள், பிற கலைகளிலிருந்து விலகி வேறுபட்டு நிற்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார் சுதானந்தா. (ஆட்டமும் அமைப்பும்: 1991:9) இந்நிலைக்கு இருவகை காரணங்கள் கூறப்படுகின்றன ஒரு சிலர், கிராமியக் கலைகள் மிகப்பழமையானவை என்கின்றனர். அதாவது, அக்கலைகள் இடத்தால் நமக்கு அண்மையிலிருந்தாலும், காலத்தால் மிகவும் தொலைவிலுள்ளவை என்பதாகும். ஒரு சிலர், எந்த ஒரு சமூகத்தில் நடைபெறும் சமூக, மனச்செயல்களின் வடிவங்களும் உணர்நிலைக்கு அப்பாலுள்ள கூட்டுப்பண்பை அடிப்படையாகக் கொண்டவை என்பர். (Levistreuss: Structural Anthropology: 1979:360) ) நாட்டுப்புற நிகழ்த்து கலைகள், உணர்தற்கு அப்பாற்பட்ட நிலையிலுள்ள குழுப்பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இக்கருத்தின் வாயிலாக அறியலாம். மேற்குறிப்பிட்ட இருவகை காரணங்களுள் எது உண்மையானதாக இருந்தாலும் நாட்டுப்புறக் கலைகள் தனித்தன்மை கொண்டவை என்பதிலும் அவை அரிதாக உணரத்தக்க நிலையிலுள்ளன என்பதிலும் கருத்து வேறுபாடிருக்க முடியாது.    இவ்வாறு தனித்தன்மை கொண்ட நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் கதை, பாட்டு, பேச்சு, நடிப்பு, தாளம், ஒப்பனை முதலிய பல்ஈறு கூறுகளைத் தன்னுள் கொண்டு விளங்குகின்றன. இவை இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம் வேறுபட்டு விளங்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றன. அவற்றோடு தொடர்புடைய நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு நிலைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அமைகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்
பல்வேறு வகையான நிகழ்த்துகலை வடிவங்கள் காணக்கிடைக்கின்றன. அக்கலை வடிவங்களை இனம் காண்பதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை பண்பாட்டு முறைமைகளை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், தென்மாவட்ட நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் வரிசையில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டுவரும் கோலாட்டக் கலைவடிவங்களை ஆய்வுப் பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட முனைவர்பட்ட ஆய்வின் அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மதுரை, சிவங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களாகக் கொள்ளப்படுகின்றன. அப்பகுதிகளில் கிராமங்கள் அதிகமாக இருப்பதாலும், அவை நாட்டுப்புற மக்களை அதிகமாகக் கொண்டிருப்பதாலும் இம்மக்கள் வாழ்வில் கோலாட்டக் கலை வடிவங்கள் பிரிக்க முடியாத கலை பண்பாட்டுக்கூறாக விளங்குவதாலும் இது ஆய்வுப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வுக்களப் பகுதியில் ஐவகை கோலாட்டக் கலை வடிவங்கள் நிகழ்த்தப்பட்டுவருவதைக் கள ஆய்வில் அறிய முடிகின்றது. இவை அனைத்தும் ஒரே தன்மை கொண்டவை. இப்பண்பினாலும் இக்கலை வடிவங்கள் அனைத்தும் கோல்களைப் பயன்படுத்தி நிகழ்த்தும் தன்மை கொண்டவையாக விளங்குவதாலும் தென்மாவட்டப் பகுதியிலேயே இன்னும் உயிர்ப்புடன் விளங்குவதாலும் இக்கலை வடிவங்கள் ஆய்வுப் பொருளாக எடுத்தாளப்பட்டன.
ஆட்டக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தன் கைகளில் கோலை வைத்துக் கொண்டு. தனக்குத் தானேயும் எதிர்வரும் கலைஞர்களிடமும் பாடல்-_தாளத்திற்கு ஏற்ப ஓடியும் குதித்தும் வளைந்தும் நெளிந்தும் ஆடும் ஆட்டம் கோலாட்டமாகும். கோல்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுவதால் கோலாட்டம் எனப் பெயர் பெறுகிறது. அவ்வாறெனில், சிலம்பாட்டம் எனப்படும் வீர விளையாட்டுக் கலையும் நீண்ட கோல்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டமாகவே விளங்குவதால், அதனையும் கோலாட்டக் கலை வடிவங்களில் அடக்கலாமா? எனில் அது தற்காப்பு அடிப்படையிலான வீர விளையாட்டுக் கலையாகும். போர்ப்பயிற்சியின் அடியொற்றி இது வீரவிளையாட்டுக் கலையாகவே சிலம்பாட்டம் விளங்குகிறது. ஆனால் தென்மாவட்டக்கலை வடிவங்கள், நாட்டுப்புற மக்களின் கலை பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் “கும்மி’’யை அடியொற்றி வளர்ந்து மக்களின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு வழிபாடு மற்றும் வாழ்வியல்  சடங்குகளில் நிகழ்த்தப்படும் சடங்கு நிலை ஆட்டமாக விளங்குகின்றன. அதனால், இக்கோலாட்டக் கலைகள் சிலம்பக் கலையினின்று நிகழ்த்துப் பொருண்மை நோக்கிலும், முறைமை நோக்கிலும் வேறுபடுகின்றன. நாட்டுப்புற மக்களின் வழிபாடு மற்றும் வாழ்க்கைச் சடங்குகளோடு தொடர்புடைய நிலையில் நிகழ்த்தப்படும் ஆட்டங்களே கோலாட்டக் கலை வடிவங்களாக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தென்மாவட்டப் பகுதிதியில்; ஐந்து வகை கோலாட்ட வடிவங்கள் நிகழ்த்தப்படுவதை அறிய முடிகிறன்றது. அவை,
“அயிலந்தரை ஆட்டம்
கழியல் ஆட்டம்
பின்னல் கோலாட்டம்
பிருந்தாவன தீபகேளி ஆட்டம்
வைந்தானை ஆட்டம்’’
என்பவையாகும். இவ்வைந்தும் “கோல்களைக் கொண்டு, அடித்து பாடல்-_தாளத்திற்கு ஏற்ப ஒரே வகை நோக்கம் கருதி நிகழ்த்தப்படும் கோலாட்டக் கலை வடிவங்களாகும். அவற்றில் அயிலந்தரை, கழியல், பின்னல் கோலாட்டம், வைந்தானை ஆட்டம் ஆகிய நான்கினையும் கோலாட்டக் கலையின் வகைகளாகக் குறிப்பிடுகிறார் சு.சண்முக சுந்தரம் (தமிழில் நாட்டுப்புறப்பாடல்கள்: 1985:245), ஆனால் பிருந்தாவன தீபகேளி என்னும் வடிவமும் ஆய்வுக்களத்தில் நிகழ்த்தப்படுவது அறியத்தக்கது. எனவே, அதனையும் சேர்த்து ஐந்து வகையாகக் கொள்ளப்படுகிறது. இவ்வடிவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட இனத்தவர்ளால் நிகழ்த்தப்படுகின்றன. எனினும், இவை அதன் அடிப்படை இயல்புகளில் ஒத்திருக்கின்றன. இவை அனைத்தும் அந்தந்தப் பகுதி மற்றும் இனமக்களுக்கு ஏற்ப அந்த பண்பாட்டுக் கலப்புடன் வேறுவேறு பெயர்களில் நிகழ்த்தப்பட்டு வரும் ஒரே வகை ஆட்டமாகும். ஆகவே இவ்வைந்து வகையினையும் கோலாட்டக் கலை வடிவங்கள் என்னும் ஒரே வகைப்பாட்டில் ஆராயும் பொழுது, தொடர்புடைய வெவ்வேறு பகுதி மற்றும் வெவ்வேறு சாதி மக்களின் கலை பண்பாட்டு நிலையினையும் தொடர்பினையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள முடியும்.
 இவ்வைந்து வகை கோலாட்டமும் வேறுவேறு பெயர்களில் வேறுவேறு பகுதிகளில் வேறுவேறு சாதி மக்களால் ஆடப்படினும் அவற்றின் பொருண்மை நிலையில் முற்றிலுமாக ஒருமித்த தொடர்புடையனவாக இருப்பதாலும் அவற்றின் தலையாய நிகழ்வான ‘கோலடித்தல்’ என்னும் வினை கருதியும் அனைவரிடமும் அறிந்திருக்கும் பெயர் கருதியும் ‘கோலாட்டம்’ என்னும் பொதுப் பொருளில் சுட்டப்படுகின்றன. ‘கழி’, ‘கம்பு’, குச்சி எனப்படும் கோல்களைக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் ‘கோலாட்டம்’ எனப்பெயர் வந்தது. இவ்வாட்டத்தில் கோல்களே முதன்மைக் கருவியாகும். பிற கருவிகள் துணைமைக் கருவிகளாகும். கோல்கள் இல்லையெனில், கோலாட்டமே இல்லை. (ச.முருகானந்தம்: தூத்துக்குடி: நேர்முகம்). இச்சிறப்புக் கருதியே இவ்வகை ஆட்டத்திற்குக் கோலாட்டம் என்று பெயர் வந்தது.
கோலாட்டக்கலை வடிவங்களின் பெயர்கள் காரணகாரிய அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ‘அயிலந்தரை’ என்பது பெண்கள் நிகழ்த்தும் பசவன்விழா தொடர்பான சடங்குமுறை ஆட்டம் ஆகும். அயில் + அந்தரை என்றும், அயிலம் + தரை என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். அயிலம் என்பது ‘அகிலம்’ என்ற சொல்லின் திரிந்த வடிவமாகும். ‘அகிலம்தரை’ என்பதே ‘அயிலம்தரை’ என்று மாறியுள்ளது. அகிலமே தரையில் ஆடும் உணர்வை ஏற்படுத்துவதால் இதனை ‘அகிலம்தரை’ என்று அழைத்தனர். அதுவே பின்பு அயிலந்தரை என்று ஆனது. பசவன் விழாவில் பெண்கள் நிகழ்த்தும் இக்கோலாட்டம் அயிலந்தரை என்று வழங்கப்படுவதை இன்றும் காணலாம். (திரிபுரசுந்தரி: மதுரை: நேர்முகம்). ‘கழியல்’ என்ற சொல் எடுத்தாளலில், முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இதனைக் ‘களியல்’ என்று குறிப்பிடுவாருமுண்டு (நாமத்துரை: மொத்தன் மொழி: நேர்முகம்) ‘கழியல் நடனம்’ என்று அ. அன்னசெல்வம் தனது ஆய்வேட்டில் குறிப்பிடுகிறார் (இளம் ஆய்வியல் ஏடு 1986). இச்சொல்லையே ஜெயரெஜினாவும் எடுத்தாள்கிறார் (இளம் ஆய்வியல் ஏடு 1988). ‘களியலாட்டம்’ என்பதே சரியான சொல் என்கிறார் கு.கதிரேசன் (இளம் ஆய்வியல் ஏடு 1988:13). இச்சொல்லையே ஞா. ஸ்டீபனும் குறிப்பிடுகிறார். (ஆராய்ச்சி 1989:105). ‘களியாட்டம்’ என்பதன் அடிப்படையில், மகிழ்வுடன் ஆடுதல் எனப் பொருள்படும்.. குமரி மாவட்டத்தில் இதனை ‘களியலடி’ என்றும், ‘களியல்’ என்றும் அழைக்கின்றனர். இம்மாவட்டப்பகுதியில் ‘களியல்’ என்னும் ஊர் பெயர் இருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
‘மருமக்கள் வழி மான்மியம்’ நூலில் தேசிகவிநாயகம்பிள்ளை, “களியல் கூத்தசைக் கம்புகள் இல்லையோ’’ என்ற அடியின்மூலம் (1965:68). ‘களியல்’ என்ற சொல்லையே எடுத்தாள்கிறார். இச்சொல்லையே ஏ.என்.பெருமாளும் (நாட்டுப்புறக் கலைகள் 1980:82) தமது நூலில் கையாள்கிறார். ‘களி’ என்ற வினையுடன் ‘அல்’ விகுதி சேர்ந்து ‘களியல்’ என்று ஆனதாக தி. நடராசன் (மதுரை: நேர்முகம்) குறிப்பிடுகிறார். ‘களி’ என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி, கள்ளுண்டு களித்தல், என்று பொருளைத் தருகிறது. (Tamil Lexi­con : 1982: Vol.II, 815) ) இவ்வாட்டம் ஆடும் முறையில் கடுமையைத் தோற்றவிப்பதால் களியல் என்பதே சரியான சொல் என்று கூறுவாரும் உண்டு. கழி அடித்து ஆடுவதால் கழியலாட்டம் எனப்பெயர் பெற்றிருக்கலாம். பின்னர் அது வழக்கில் களியலாட்டம் எனத் திரிந்து வழங்கப்பட்டிருக்கலாம்.
‘களி’ என்று வினைச் சொல்லோடு ‘அல்’ என்ற விகுதி சேர்ந்து, ‘களியல்’ என்று வந்திருக்க வேண்டும். ஆடிக் களித்தல் என்னும் வினையை உணர்த்துவதால், களியல் என்ற பெயரே பொருத்தமானது. படைத்தல் என்பது படையல் என்றும், துவைத்தல் என்பது துவையல் என்றும், பொரித்தல் என்பது பொரியல் என்றும், குளித்தல் என்பது குளியல் என்றும் வடித்தல் என்பது வடியல் என்றும், அவித்தல் என்பது அவியல் என்றும் வழங்கப்படுகின்றன. அவ்வாறே ‘களித்தல்’ என்ற சொல்லும் களியல் என்று ஆகியிருக்கலாம்.
கேரளத்தில் இவ்வாட்டம் கோலடி, கோல்களி (ஆ.அன்னசெல்வம் (இளம் ஆய்வியல்ஏடு 1986:15) கம்படி களி (சு.சண்முகசுந்தரம்: தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள் 1985:15) என வழங்கப்படுகின்றது. இதில் உள்ள கோல், கம்பு என்ற சொற்கள் மறைந்து, ‘களி’ என்ற சொல்லின் முக்கியத்துவத்தினால் ‘களித்தல்’ என்று ஆகி, பின் களியல் என்று மாறியிருக்கலாம். இக்களியலாட்டம், ஆய்வுக் களப்பகுதியில் விளையாட்டு என்று மாறியிருக்கலாம். இக்களியலாட்டம், ஆய்வுக் களப்பகுதியில் விளையாட்டு என்று  அழைக்கப்பட்டு வருவது இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது. இவ்விளையாட்டு என்ற சொல் ஆட்டத்தையே குறிப்பிடுகிறது. இக்கலை வடிவங்கள் உருவாவதற்கு மூலமாக திகழ்ந்த ‘களரிப்பயிற்று’ என்னும் போர்ப்பயிற்சிக் கலை ஒருவகை வீர விளையாட்டே. ‘தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற நூலில் சு.சண்முகசுந்தரம், ‘களியல்’, ‘கழியல்’ என்ற இருசொற்களையும் பயன்படுத்துகிறார் (1985:209, 248) அன்னசெல்வம் என்பவர் ‘கழியல் நடனம்’ என்னும் ஆய்வேட்டில், கழிகளைக் கையில் பிடித்து ஆடுவதால் ‘சுழியல்’ என்ற பெயரே தமது ‘கழியல்’ பெயரே பொருத்தம் உடையது என்கிறார்.. (1986:16). எனவே கழியலாட்டம் என்னும் பெயர் தொடர்பாக நாட்டுப்புறவியல் அறிஞர்களிடையே கருத்து ஊடாட்டம் இருப்பதை அறிய முடிகிறது.
கழி, கோல், குச்சி கம்பு என்ற சொற்கள் ஒரு பொருளை உணர்த்தும் பல சொற்கள் ஆகும். ‘கழி’ என்பது கோல்களை உணர்த்தும். இவ்வகை ஆட்டத்தின் பிரதான கருவியான கழிகளை அடிப்படையாகக் கொண்டு, இவ்வாட்டம் ‘கழியலாட்டம்’ எனப்படுகிறது. ‘கழி’ என்பது கேரளத்தில்கோல்களை உணர்த்தும் சொல்லாகும். இவ்வாட்டம், வழக்கில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அங்கு வழங்கப்பட்டு வரும் ‘கழி’ என்ற சொல்லே ஆய்வுக் களத்திலும் கோல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆட்டத்தின் பிரதான கருவியை அடிப்படையாகக் கொண்டு, இக்கோலாட்டக் கலைவடிவம் ‘அல்’ என்றும் விகுதி சேர்ந்து ‘கழியல்’ என்று ஆகியிருக்க வேண்டும். கழி என்பது பெயர்ச்சொல். எனவே அதனுடன் ‘அல்’ என்னும் விகுதி சேர்வது பொருந்தாது. அதனால் முதலில் கழியாட்டம் என்றே இருந்து, பின்பு பேச்சு வழக்கில் ‘கழியலாட்டம்’ என்று மாறி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கோலாட்டக் குச்சிகளுடன் வண்ணக் கயிறுகளை இணைத்து, அக்கயிறுகளில் பின்னலை உருவாக்கியும் அவிழ்த்தும் பாடல் இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் பின்னல் கோலாட்டம் ஆகும். ‘கோலாட்டத்தின் மூலம், கயிறுகளில் பின்னல்களை ஆக்கியும் அழித்தும்  மகிழ்வதைப் ‘‘பின்னல் கோலாட்டம்’’ என்பார் க.கண்முகசுந்தரம். பின்னலை உருவாக்கி அவிழ்க்கும் பணியைப் பிரதானமாகக் கொண்ட கோலாட்டம் என்பதால் இதனைப் பின்னல் கோலாட்டம் என்று அழைக்கின்றனர். கயிறுகளில் பின்னல்களை ஆக்கியும், அவிழ்த்தும் ஆடுவதால் இதனைக் “கயிறு பின்னல் ஆட்டம்’’ என்று அழைப்பாரும் உண்டு (சரசுவதி வேணுகோபால்: மதுரை:நேர்முகம்). இக்ககோலாட்ட முறைகளில் கயிறு பின்னல், என கலைஞர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக் கொள்ளும் ஆட்ட முறைகள் காணப்படுவதால், ‘கயிறு  பின்னல் கோலாட்டம்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். ‘பின்னுதல்’, பின்னிக் கொள்ளுதல் என்ற பணியையே ‘பின்னல்’ என்று அழைப்பர். இச்செயற்பாட்டை இக்கோலாட்டக் கலைவடிவம் முதன்மை இயல்பாகக் கொண்டு விளங்குகிறது.
‘தீபகேளி’ என்பது தீப வழிபாட்டைக் குறிக்கும். தீபத்தை வைத்து பிரார்த்தனை செய்து வழிபடும் சடங்கு நிலையைத் ‘தீபகேளி’ என்பர். தீபம் என்பதற்கு விளக்கு என்று பொருள். ‘கேளி’ என்பது கொண்டாட்டத்தை அதாவது கேளிக்கையைக் குறிக்கும். தீபத்தைச் சுற்றி மகிழ்ச்சியுடன் குதித்து ஆடி மகிழ்வது தீபகேளி ஆகும். சௌராஷ்டரா தேசத்தில் கிருஷ்ணபகவான், கோபிகளிடம் ராஜகிரிடை செய்தமை ‘பிரிந்தாவன தீபகேளி’ யாகும். (கி.நளினி ஆய்வேடு:1984) பிருந்தாவனத்தில் கண்ணன், ராதையுடனும் ருக்மணியுடனும் கோபியர் பெண்களுடனும் சேர்ந்து ஆடுவதை இக்கோலாட்டக்கலை வடிவம் பிரதிபலிப்பதாக அறிய முடிகிறது. கண்ணனுடைய பிருந்தாவன ராஜகிரிடை, ஜலகிரிடை லீலைகளை விளக்கும் ஆட்டம் என்பதால் பிருந்தாவன தீபகேளி எனப்பட்டது. “கிருஷ்ணன், ராதாவிடம் சிறப்பாக அன்பு செய்து ராதா ருக்மணி, கோபிகளுடன் கோலாட்டம் நடத்தினார். இப்புராண நிகழ்வே இவ்விழாவிற்கு அடிப்படையாகும்’’ (எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி மதுரை: நேர்முகம்).
பிருந்தாவன தீபகேளி ஆட்டத்தில், ஆட்டத்தின் இயக்கச் செயற்பாட்டு நிகழ்வை, ஆட்டக் கலைஞர்கள் கண்ணனுடைய பிருந்தாவன லீலைகள் என்றே எண்ணி காரியத்தில் இறங்குகின்றனர். தீபத்தை ஆட்ட வட்டத்திற்குள் வைத்து வழிபட்டு அதனைச் சுற்றி வந்து ஆடுகின்றனர். இந்நிகழ்வில் தீபம் கண்ணனாகக் கொள்ளப்படுகிறது. ஆட்டக் கலைஞர்கள் தங்களை ராதையாகவும் ருக்மணியாகவும் கோபியர் பெண்களாகவும் எண்ணிக் கொள்கின்றனர். இதனால், அவ்வாறு ஒப்பனை செய்வதைக்கூட வழக்காகக் கொண்டுள்ளனர் என்கிறார் துளசி ராமசாமி. இவ்வாறு பிருந்தாவனத்தில் உள்ள தீபத்தைக் கண்ணனாகவும் தங்களைக் கோபியர் பெண்களாகவும் எண்ணி, தீபத்தைத் சுற்றி வந்து கேளிக்கை நிகழ்த்துவதால் ‘பிருந்தாவன தீபகேளி ஆட்டம்’ என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இது தீபகேளி கோலாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. (மங்கை:19-_11_88:8) இதில், நிகழ்வும் இதன் அடிப்படைத் தன்மையாக அமைவதால் இதற்குப் ‘பிருந்தாவன தீபகேளி” எனப் பெயர் வந்திருக்கலாம்.
பிருந்தவானத்தில் கண்ணன், பெண்களோடு ஆடி மகிழ்ந்£தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆட்டக் கலைஞர்கள் தீபத்தைக் கண்ணனாகவும் தங்களை ராதை ருக்மணி, கோபியர் பெண்களாகவும் கொண்டு கோலடித்துக் கேளிக்கை நிகழ்த்துவதால் இக்கோலாட்டக்கலை வடிவம், ‘பிருந்தாவன தீபகேளி’ என அழைக்கப்படுகிறது.
வைந்தானை என்பது ‘வளம்தான்’ என்று பொருள்படும். ‘வளம்தான்’ என்பதுதான் வளைந்தானை என்று மாறி, வைந்தானை என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். வளம் பெறுவதும், வளம் பெருகுவதும் அதற்குக் காரணமான மழை வேண்டுவதும் அதற்காக இறைவனை வழிபடுவதுமே இவ்விழாவின் தலையாய அம்சமாக விளங்குகிறது. வளம்பெறுதல் நோக்கில் இறைவனுக்குப் படையவிட்டு, ஆடிப்பாடி வழிபடும் சடங்கு நிலை வழக்காறுகளின் வெளிப்பாடாகவே ‘வைந்தானை’ என்ற சொல் தோன்றியிருக்கலாம். இது வைந்து+ஆனை என்று பிரியும். வைந்து என்பது, நைந்து என்பதன் திரிபே. நைந்து+ஆணை என்பதே வைந்து + ஆணை என்று ஆகியிருக்கலாம். அதாவது, இவ்விழாவில் இம்மக்கள் வழிபடும் ஐயனாரான வல்லடிக்காரன், காக்கும் வளமைக் கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறான். வேண்டியதைக் கொடுப்பவன், அதனால் பக்தர்கள்அவனிடம் உரிமையுடன ஆணையிட்டுக் கூறினர். அதாவது நைந்து ஆணையிட்டுக் கூறியதன் அடிப்படையில் நாட்டுப்புற மக்கள் ‘நைந்தானை’ என்று வழங்கி வந்திருப்பர். பின்பு இச்சொல், நைந்தானை என்று மாறி தற்பொழுது ‘வைந்தானை’ என்று ஆனது என்பாரும் உண்டு (நல்லுச்சாமி வல்லடி காரன்பட்டி: நேர்முகம்)
இ. பாலசுந்தரம் வைந்தானை ஆட்டப் பாடல்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது வசந்தன் பாடல்கள் என்னும் ஆட்டத்தை வசந்தனாட்டம் என்று குறிப்பிடுகிறார். அவர், இவ்வாட்டத்தை வசந்தன், கோலாட்டம், பொல்லடி என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். “ஈழத்தில் மட்டக்களப்பு பகுதியில் உள்ள இக்கோலாட்டத்தை ‘வசந்தன் கூத்து’ என்கிறார். ஆனால், தமிழகத்தில் இவ்வாட்டத்தைக் குறிப்பிடும் ‘வசத்தன்’ என்னும் சொல்வழக்கு இல்லை. தமிழ்நாட்டில் வழக்கு வீழ்ந்து போன பழைய தமிழ்ச் சொற்களும் சங்க காலத்து ஒழுக்கங்களும் ஆடலும் பாடலும் ஈழ நாட்டிலேயே இன்னும் நின்று நிலவுகின்றன என விபுலானந்த அடிகள் கூறுவது, ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது’’ என்கிறார் இ. பாலசுந்தரம் (வி.மி.ஞானப்பிரகாசம், சு.ப. அறவாணன் நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்: 1974:29). மேலும் இந்நடனம், வசந்த கால மாதங்களில் சிறப்பாக நிகழ்த்தப்படுவதால் காலவாகு பெயரான ‘வசந்தன்’ எனப்பெயர் பெறுவதாயிற்று. வசந்த காலத்திற்குரிய ஆடலோடு பாடலாதலின் ‘வசந்தன் கவி’ காலத்தினாற் பெற்ற பெயராகும் என்றார் அவர்.
கோலாட்டத்தைப் பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் வசந்தகால விளையாட்டு என்றே கூறலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது (1959:தொ.4:37). இக்கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு சிலர் வசந்தன் விழா என்பதுதான் வைந்தானை விழா என்றும் வசந்தன் ஆட்டம்தான் வைந்தானை ஆட்டம் என்றும் மாற்றம் பெற்றன என்கினறனர். (தி.நடராசன்:நேர்முகம்) தென்னிந்தியாவில் இது கோலாட்டம் என்று வழங்கப்படுகிறது.  (சுரேந்திரன்: நேர்முகம்) ஆண்கள் ஆடும் கோலாட்டத்தில் வைந்தானை என்ற வகையுமுண்டு எனக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. (1959 தொ.4:37, 38) “தமிழகத்தில் இதனைப் பெண்கள் ஆடும்பொழுது, கோலாட்டம் என்றும், ஆண்கள் ஆடம்பொழுது வைந்தானை என்றும் கூறும் மரபு சிந்தித்தற்குரியது. மட்டகளப்பில், ஆண்கள் ஆடும் வசந்தன் கூத்திற்கும், தமிழகத்தில் ஆண்கள் ஆடும் வைந்தானைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் இ. பாலசுந்தரம் (வி.மி. ஞானப்பிரகாசம், க.ப. அறவாணன்: நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள் 1974:29)
தற்பொழுது ஆய்வுக்களத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் வைந்தானை விழாவும் ஆட்டமும் வசந்த காலத்தில் _ அதாவது தை, மாசி, பங்குனி மாதங்களில் நிகழ்த்தப்படுவதால் வசந்தன் விழா வசந்தன் ஆட்டம் என்று முதலில் இருந்து, பின் வைந்தானை விழா, வைந்தானை ஆட்டம் என்று மாறியிருக்கலாம் என்பாரும் உண்டு. இ. முத்தையா மதுரை: நேர்முகம்) தமிழ்க் கலைச் சொல் அகராதியில் ‘வைந்தானை’ என்ற சொல்லின் பொருள் குறிப்பிடப்படவில்லை. ஆய்வுக்களத்தின் இன்றைய சூழ்நிலையையும் மக்களின் வாழ்க்கை நிலையையும் தகவலாளர்களின் கூற்றுக்களையும் வைந்தானை ஆட்டத்தின் இயல்புகளையும் அதன் பாடற்பொருளையும் வழிபாட்டு நிலைகளையும் கருத்தில் கொண்டு நோக்கின், முதலில் குறிப்பிட்டது போன்று இவ்விழாவும் ஆட்டமும் ‘வளம்’ வேண்டி நிகழ்த்தப்படும் விழாவாகவும் ஆட்டமாகவும் அமைவதால் இது ‘வளம்தானை’ என்று இன்று, பின்பு வைந்தானை என்று மாறி வழங்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வர இயலுகிறது. இங்குக் கருவிகளின் அடிப்படையில் பெயரிடப்படாமைக்குக் காரணம், அதை விட அவ்விழா மற்றும் ஆட்டத்தின் நோக்கப் பொருண்மை மேம்பட்டு நிற்பதால் அதன் அடிப்படையில் பெயர் வழக்கு உருவாகியிருக்கலாம் என்று கொள்ள இடமேற்படுகிறது.
கோலாட்டக் கலைவடிவங்கள் தமிழகத்தின் தென்மாவட்டப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக வெவ்வேறு பெயர்களுடன் நிகழ்த்தப்படுவதைக் காணலாம். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பிற உலக நாடுகளிலும் கூட கோலாட்டக் கலைவடிவங்கள் வழக்கில் உள்ளன. இக்கலை வடிவங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றாற்போன்று இயல்புகளைப் பெற்றிருந்தாலும், வேறுவேறு பெயர்களுடன் வழங்கப்பட்டாலும் அவை, ‘கோல்’ என்னும் முதன்மை ஆட்டக்கருவியின் அடிப்படையில் ஒரே நிகழ்த்துக் கலைவடிவமாக வழங்கப்படுகிறது. இக்கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு ஆராயும்பொழுது, கோலாட்டக்கலை வடிவங்கள், தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும்கூட நிகழ்த்தப்பட்டு வந்தமை அறியலாகிறது.
கோலாட்டக் கலையானது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களால், தமிழ்ப் பண்பாட்டின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட நிகழ்த்து கலையாகும். நாட்டுப்புற மக்களின் தொன்மைத் தொழிலான வேட்டையாடுதல், போரிடுதல் என்பவற்றின் பயிற்சி முறைகளை அடியொற்றி எழுந்த தற்காப்பு மற்றும் வீரவிளையாட்டுக் கலைகளின் இயல்புகளையும் காலம் காலமாகச் சடங்கு நிலையில் பெண்களால் நிகழ்த்தப்பட்டு வந்த கும்மி ஆட்டத்தின் இயல்புகளையும் பெற்று புதிய கலை வடிவமாக உரிப்பெற்ற நிகழ்த்து கலையே கோலாட்டமாகும். இந்த அடிப்படையிலேயே இக்கலை வடிவங்கள் கும்மியைப் போன்று சடங்கு நிலை ஆட்டமாக வளர்ந்தது கும்மியைப் பெண்கள் நிகழ்த்தியவாறு கோலாட்டத்தை ஆண்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும். எனவேதான் இக்கோலாட்டக் கலைவடிவங்களில் ஆடவர்களின் வாழ்க்கை மரபோடு நெருங்கிய தொடர்புடைய வேட்டை மற்றும் போர்ப் பயிற்சிக் கூறுகள் அதிகமாகக் கலந்திருக்கின்றன. சான்றாக, இன்றைய நிலையில் வழக்கிலிருக்கும் கோலாட்டக் கலைவடிவங்களில் அதிகமாகக் கலந்திருக்கும் தற்காப்பு மற்றும் வீரவிளையாட்டுக் கலைகளின் இயல்புத் தாக்கத்தைக் குறிப்பிடலாம். அந்த வகையில் பெண்கள் சடங்கு நிலைச்சூழல்களில் கைகளைக் கொட்டி ‘கும்மி’யை நிகழ்த்தினர். ஆடவர்கள் தற்காப்புக் கருவிகளில் ஒன்றான கோல்களைக் கொட்டி சடங்கு நிலையில் இக் கோலாட்டத்தை நிகழ்த்தி வந்துள்ளனர். இக்கோலாட்டக் கலையின் பல கூறுகள் தற்காப்பு மற்றும் வீரவிளையாட்டுக் கலையான ‘களரி’ மற்றும் அதனுள் ஒரு பகுதியாக விளங்கும் ‘சிலம்பம்’ ஆகியவற்றின் தன்மைகளுடன் அமைந்திருப்பதை இனம் காண முடிகிறது.
கோலாட்டக் கலைவடிவங்களின் பயிற்சி முறைகள், குரு வணக்கநிலை முதலிய கூறுகள் களரிப்பயிற்று என்னும் தொன்மையான போர்க்கலையின் பயிற்சி முறைகளையும் குரு வணக்கத்தையும் ஒத்திருக்கின்றன. கோலாட்டக் கலைஞர்களுக்குக் குரு தன் கையினால் ‘கோல்’களை எடுத்துக் கொடுப்பது களரிப் பயிற்றில் ‘குரு’ கச்சை கட்டிவிடும் தன்மையை உணர்த்துகிறது. மேலும் கோலாட்டக் கலைஞர்கள், தரையைத் தொட்டு வணங்குவது களரிப் பயிற்றில் உள்ள சாஸ்ட்டாங்க குருவணக்கத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. கோலாட்டக்கலைவடிவங்களில் கோல்களின் இயல்பு களரிப் பயிற்றில் ஒரு பகுதியாக விளங்கும் சிலம்பாட்டத்தின் கோல்களோடு தொடர்புடையது. இரு கலை வடிவங்களிலும் கோல்களின் சுற்றளவு ஒன்றரை அங்குலம் அளவே அமைந்துள்ளது. ஆனால் நீளம் மட்டும் வேறுபடுகிறது. கோலாட்டக் கலைவடிவங்களில் ஒன்று முதல் இரண்டு அடி கோல்களும் களரிப்பயிற்றில் சுமார் நான்கு முதல் ஐந்து அடி கோல்களும் பயன்படுத்தப் படுகின்றன. கோலாட்டக் கலைவடிவங்களில் தவில், மிருதங்கம் முதலிய தோற்கருவிகள் பயன்படுத்தப்படும் தன்மை, களரிப்பயிற்றில் உருமி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தும் தன்மையை ஒத்த வழக்காறு ஆகும்.
கோலாட்டக் கலைவடிவங்கள் நிகழ்வு இடம்பெறும் வழிபாடு தொடர்பான சடங்குநிலைச் சூழலே களரிப்பயிற்று நிகழ்த்தும் சூழலாக அமைகிறது. மேலும் கோலாட்டக் கலைவடிவங்களில் வழக்கில் உள்ள ‘அடவு’ என்னும் சொல்லும் அடவு முறைகளும் களரிப் பயிற்றின் உத்தி முறைகளை முழுமையாகப் பிரிதிபலிப்பதாக அமைகின்றன. களரிப்பயிற்றின் அடவுகள், பின்னால் வந்த நாட்டுப்புறக் கலைகளின் கூறுகளாக அமைந்தன (பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம்: 1985) என்ற கருத்து இங்கு பொருத்திப் பார்க்கத்தக்கது. களரிப் பயிற்றிலிருந்து தனி கலையாக உருவான தற்காப்புக் கலையே சிலம்பக்கலை. எனவே, களரிப்பயிற்றின் அத்தனை இயல்புகளையும் சிலம்பக் கலையும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களும் கருத்துக்களும் கோலாட்டக் கலைவடிவங்கள் இன்றைய கேரளாவிலும் அதோடு ஒட்டிய தமிழகப்பகுதிகளிலும் வழக்கிலிருக்கும் போர்க்கலை வடிவங்களான களரிப் பயிற்று மற்றும் சிலம்பக் கலையின் இயல்புகளுடன் அவற்றின் தாக்கம் பெற்றுத் தோன்றியவையே என்ற கருதுகோளைத் தெளிவாக்குகின்றன. இக்கருத்துக்களினடிப்படையில் தற்போதைய கேரள நிலப்பகுதியை உள்ளடக்கிய பண்டைத் தமிழ் மண்ணே இக்கோலாட்டக் கலைவடிவங்களின் தாயகமாக இருக்கலாம் எனக் கொள்ள இடமேற்படுகிறது.
கோலாட்டக்கலை, பெண்கள் கும்மியை மிகவும் பிரதான சடங்குநிலைக் கலையாகக் கொண்டு நிகழ்த்தி வந்த சூழலின் அடிப்படையில் ஆடவர்கள் அதன் இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு கோல்களைப் பயன்படுத்தி அவர்களின் தொழில் மற்றும் இயற்கையான இயல்புக்கு ஏற்ப வீரவிளையாட்டுக் கூறுகளைக் கலந்து ஒருசில மாற்றங்களை உருவாக்கி நிகழ்த்திய கலையாகும். ஆய்வுக்களத்தில் இக்கோலாட்டக்  கலைவடிவங்களை நிகழ்த்துவதில் ஆண்களே அதிகமாக ஈடுபட்டிருக்கும் தன்மையும் ஒரே வகையான சடங்குநிலைச் சூழல்களில் பெண்கள் கும்மியையும் ஆண்கள் கோலாட்டத்தையும் நிகழ்த்தும் வழக்காறும் மேற்குறிப்பிட்ட கருத்தை உறுதிப்படுத்துகின்றன. மேலும் கழியல், பிருந்தாவன தீபகேளி வைந்தானை ஆகிய கடினமான வடிவங்கள் ஆண்களாலேயே நிகழ்த்தப் படுவதும் பெண்கள் அயிலந்தரை, பின்னல் கோலாட்டம் ஆகிய எளிமையான வடிவங்களையே நிகழ்த்துவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவை.
“எட்டுச் சிறுவர் கூடி இன்பமாய்க் கழியலாடி’’. பின்னும் கோலாட்டப் பாடல் ஒன்று ஆண்பிள்ளைகளே கோலாட்டத்தைக் கற்று நிகழ்த்திய செய்தியைப் புலப்படுத்துகிறது. மேலும் இலக்கியங்களில் பெண்கள், கும்மி கொட்டியதற்கான பழஞ்சான்றுகள் கிடைக்கும் அளவுக்குக் கோலாட்டம் நிகழ்த்திய சான்றுகள் இல்லை. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த காஞ்சி புராணத்தில் ‘செவ்வாய்ச்சியர் கோலாட்டம்’ என்ற குறிப்பு கிடைக்கிறது. இச்செய்தி, கண்ணன் பிருந்தாவனத்தில் பெண்களுடன் கோலாட்டம் செய்ததாகக் கூறப்படும் புராணச் செய்தியின் அடிப்படையில் எழுந்ததாகக்கூட இருக்கலாம். எனவே கோலாட்டம் தொன்மைக் காலத்தில் ஆண்களால் நிகழ்த்தப்பட்டதா? பெண்களால் நிகழ்த்தப்பட்டதா-? என்பதில் முடிவுச்சிக்கல் எழுகிறது. இவ்வாறு சரியான சான்றுகள் கிடைக்காத நிலையில், இவ்வாட்டம் இன்றைய நிலையில் நிகழ்த்தப்படும் முழுமையான கூறுகளின் அமைப்பைக் கருத்தில் கொண்டு, அவை உணர்த்தும் பண்புகளின் அடிப்படையில் ஒரு முடிவைக் கொள்வது பொருத்தமாக அமையும். இது காரண காரிய ஊகத்தின் அடிப்படையில் கொள்ளும் முடிவு என்பது நினைவில் கொள்ளத்தக்கது. பெண்கள், சடங்கு நிலையில் ஒரு கலையை நிகழ்த்தத் துடித்த அடிப்படை உணர்வினால் கோலாட்டத்தை உருவாக்கி அதே சடங்கு நிலைச் சூழல்களில் நிகழ்த்தியிருக்கலாம். தற்காலத்தில் இக்கலை பயில்முறைக் கலையாகி பின் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் தொழில்முறைக் கலையாகி இன்று வழக்கிழந்து போய்க் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதனைக் காப்பதும் வளர்ப்பதும் அவசியமாகும்.
நாட்டுப்புற மக்களிடம் வழக்கிலிருக்கும் கோலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம், அனுமானாட்டம், கரடி ஆட்டம், புலி வேடம் முதலிய ஆட்டங்கள் போலச் ‘செய்தல்’ அடிப்படையில் நிகழ்த்தப்படுபவையே. இந்நியதியின் அடிப்படையில், போருக்குச் செல்வதற்குமுன் பயிற்சி எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையின் காரணமாக பயிற்சியின் அவசியம் பற்றிய நம்பிக்கை வளர்ந்தது. இதன் காரணமாகப் போர்ப் பயிற்சியை அத்தியாவசியமாகச் செய்யும் நிலை உருவானது. எனவே போரிடுவது போல் பாவனை செய்து ஆடினர். அதன் விளைவாக வீரக்கலைகள் பல, போலச் செய்தல் அடிப்படையில் பாவனை ஆட்டமாக சடங்கு நிலையில் நிகழ்த்தப்பட்டன.
போர்ப்பயிற்சியை உணர்த்தும் வீரக் கலைகளைப் போன்று கருவிகளைப் பயன்படுத்தியும், பல்வேறு இயக்க நிலைகளைப் பின்பற்றியும் எதிரிகளைப் பாய்ந்து தாக்குவது போன்றும் கொல்வது போன்றும் ‘பாவனை’ ஆட்டங்களை நிகழ்த்த ஆரம்பித்தனர். இந்த நியதியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியதன் பயனாக அது கட்டாயச் சடங்காக மாறியது. எந்த ஒரு செயலையும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அத்தியாவசியமாகவும் கட்டாயமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தும்பொழுது, அது சடங்குநிலையை அடைகிறது. அந்த அடிப்படையிலேயே வீரக்கலைகளாக இருந்த போர்ப்பயிற்சிக் கூறுகள் சடங்குநிலை ஆட்டங்களாக மாறின. இந்தப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட கோலாட்டக் கலை வடிவங்களும் மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் கருத்துக்களின் அடிப்படையிலேயே விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் கருத்துக்களின் அடிப்படையிலேயே விளங்கின. போர் முறையைப் புலப்படுத்தும் வீரக்கலைகளின் கூறுகளையும் கும்மியின் தன்மைகளையும் பெற்று ஒருவகை பாவனை ஆட்டமாக இக்கோலாட்டக் கலைகள் உருவாகி, சடங்குநிலை ஆட்டமாக நிகழ்த்தப்பட்டன. சடங்குமுறைச் சூழலில் நிகழத்தப்பட்டபொழுது நாட்டுப்புறமக்கள் தங்கள் வேண்டுதல்களையும் இறைப்பற்றையும் புராணக்கதைகளின் ஈடுபாட்டையும் வளமை நோக்கத்ததையும் பாடல்களாகப் பாடி அவற்றிற்கேற்ப கருவிகளின் இசையைச் சேர்த்து ஒரு நிகழ்த்துக் கலையாக வடிவமைத்தனர்.
சடங்கு நிலை ஆட்டமாக உருவாகி, வழிபாட்டுச் சடங்குகளில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்த கோலாட்டக்கலை வடிவங்கள், பயில் முறைக் கலையாக மாறி மக்களின் பல்வேறு வாழ்க்கை சடங்குகளிலும் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு ஆட்டத்தின் சூழல் மாறும் பொழுது, அதன் தன்மைகளும் மாற்றமடையும். வழிபாட்டுச் சடங்கு நிகழ்வுகளில் சடங்காக நிகழ்த்தப்பட்ட கோலாட்டக் கலை வடிவங்கள் பாடல், இசைக் கூறுகளைச் சேர்த்து நிகழ்த்தப்படும் கலை வடிவமாகப் பரிணமித்தது. நாட்டுப்புற மக்கள், தெய்வ விழாக்களில் சடங்காக இக்கலை வடிவங்களை நிகழ்த்தப்படும் கலை வடிவமாகப் பரிணமித்தது. நாட்டுப்புற மக்கள், தெய்வ விழாக்களில் சடங்காக இக்கலை வடிவங்களை நிகழ்த்தும் பொழுது அவர்களது எண்ணங்கள், சமயச் சிந்தனைகள், வேண்டுதல்கள், முறையீடுகள், பிரச்சனைகள் முதலியவற்றை இசைக் கருவிகளின் இசைக்கேற்பப் பாடி அதற்கேற்ப நிகழ்த்தும் தன்மை பெறும் பொழுது, ஆட்டத்தின் ‘சடங்கு நிலை’ என்ற தன்மையிலிருந்து மாறி கலை ஆர்வத் தன்மையைப் பெற்றன. அதாவது வட்டமாக அமர்ந்து கண்டும் கேட்டும் இன்புறும் வகையில் ஒரு கலை வடிவமாக மாறியது. அந்நிலையில்தான் திருமணம், பூப்பு நீராட்டு, இறப்புச் சடங்கு முதலிய வாழ்க்கைச் சடங்குகளில் ஆடப்பட்டு வந்தன. எனவே, இந்நிகழ்த்து முறைமை கருதி, மரபு நிலையாக வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய மக்களே கற்று வந்த இக்கலையை சமூக மக்கள் ஒவ்வொருவரும் கற்க ஆரம்பித்தனர். அவ்வாறு மரபு நிலைக் கலைஞர்களிடம் பயின்று, கலை ஆர்வ நோக்கில் நிகழ்த்தப்பட்டதால் இக்கலை பயில்முறைக் கலையாக மாறியது.
“சமுதாய வளர்ச்சியினால், உடமையாளர் உடமையற்றோர் என்ற இரு பிரிவுகள் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்டபின், கூட்டு நடனம், கூட்டமைப்பிலிருந்து தோன்றிய கலைகள் உடமையற்றோரிடையே பழங்கால எச்சமாக நின்றன. இக்கூறுபட்ட சமுதாயத்தில் தனித்திறமையுடைய கலைகள் வளர்க்கப்பட்ன. கலைஞர்களது கலைத்திறமை ஒரு தொழிலுக்கு அடிப்படையாயிற்று’’ என்பார் நா. வானமாமலை (ஆராய்ச்சி 29.78:88) ஒரு கலை, தொழிலாக மாறும் பொழுது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பணமதிப்புச் சமுதாயத்தில் தொழில் என்பது பணம் ஈட்டும் கருவியாகவே விளங்குகிறது. இந்நிலையில் பணம் திரட்டும் வழிமுறையைக் கண்ட கலைஞர்கள், மக்களிடம் கலைகளுக்கு இருந்த செல்வாக்கினால் அவற்றைத் தொழில் முறையாக நிகழ்த்திப் பணம் திரட்ட ஆரம்பித்தனர். இந்த அடிப்படையில் வாழ்க்கைச் சடங்குகளில் கலை ஆர்வ நோக்கில் பயில்முறைக் கலையாக நிகழ்த்தப்பட்டு வந்த கோலாட்டக் கலை வடிவங்களும் ஆட்டக் கலைக் தொழிலாகப் பல்வேறு சூழல்களில் நிகழ்த்தப்பட்டன.
இந்நிலையில், கலைத் தன்மையை விட, வருமானமே கலைஞர்களுக்கு முக்கியமாகப்பட்டது. எனவேதான், கோலாட்டக் கலை வடிவங்களில் பல மாற்றங்களை மேற்கொண்டனர். இம்மாற்றங்கள், காலத்திற்கு ஏற்பவும் மக்களின் இரசனை உணர்வு, விருப்பத்திற்கு ஏற்பவும் அமைந்தன. பணம் கொடுப்பவர்களைப் புகழ்ந்தும், வாழ்த்தியும் அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்பப் பாடல்களையும் ஆடல்களையும் மாற்றி அமைத்தும் செயல்படக் கூடிய நிலை உருவானது. அந்தச் சூழலுக்கு ஏற்பவே பல பாடல்கள் உடனுக்குடன் உருவாக்கிப் பாடப்பட்டன. ஒருவர் இந்து, கிறித்தவம், இசுலாம் முதலிய எல்லா சமயப் பாடல்களையும் தெரிந்து வைத்திருக்கும் நிலை உருவானது. இந்நிலையில் கலை நோக்கத்தை விட்டு பண நோக்கத்தையே சிறப்பாகக் கொண்டு செயற்கையாக ஆடும் தன்மை வளர்ந்தது.
கோலாட்டக்கலை வடிவங்கள் பயில்முறைக் கலையாக இருந்த நிலையில், பணத்திற்காக அல்லாமல், தன் திறனைக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் “தன்னைப் பாராட்ட வேண்டும். புகழ் கிடைக்க வேண்டும்’’ என்ற எண்ணத்தில் கலைஞர்கள் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஆடினர். (சி. கனகசபாபதி: மதுரை : நேர்முகம்) ஆனால், தொழிலாக மாறியதால் கலை ஆர்வம் மறைந்தது. எதையாவது, எப்படியாவது ஆடி நேரத்தைக் கடத்தி, பணத்தைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது. எனவே கலைஞர்கள் வருமான அடிப்படையில் செயல்பட்டனர். “திறனைக் காட்டல்’’ என்பதை விட “வருவாய் பெறல்’’ என்பதே நோக்கமாக அமைந்தது.
பயில்முறைக் கலை நிலையில் இருந்து, தொழில் நிலைக்கு வந்தபின் அவற்றின் சிறப்புத்தன்மை குன்ற ஆரம்பித்தது. திரைப்படத் துறையின் தாக்கத்தினாலும் பிற கலைவடிவங்களின் கலப்பினாலும் புதிய இ¬ச் கருவிகளின் பயன்பாட்டினாலும் அதன் மரபு நிலை அழிந்தது. இவ்வாட்டம், பயில்முறைக் கலையாக இருந்தபொழுது, குழுனரிடையே உறவு மிக நன்றாக இருந்தது. குரு_சீடர் உறவு முறைக்குத் தனிப்பெருமை இருந்தது. தொழில் முறை கலையாக மாறியபின் இப்பண்பாட்டு நிலைகள் அடியோடு மறைந்தன. கலைஞர்களால்தான் குழுத்தலைவர் பணம் பெறுகிறார் என்ற எண்ணம் வளர்ந்தது. அதனால், ஆசிரியர்_மாணவர் என்ற உறவுநிலை கெட்டு, பண்பாட்டுச் சீரழிவு ஏற்பட்டது. இவ்வாறு கோலாட்டக் கலை வடிவங்கள் பயில்முறைக் கலை நி¬லியிருந்து தொழில் நிலைக்கு வந்தமையால், அதன் மரபு நிலை கெட்டு இன்றைய சூழலில் மதிப்பிழந்து காணப்படுகிறது. அதனை மீண்டும் வளர்த்தெடுப்பதும் ஆவணப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.